திங்கள், 13 செப்டம்பர், 2010

நன்றி நெருப்பு இணையம்



- அர்ச்சுணன்
தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் படையினரிடம் சரண் அடைய வில்லை என்றும், அவர் இறுதிவரை மோதலில் ஈடுபட்டு, படையிருடன் ஆன மோதலிலேயே கொல்லப்பட்டார் என்றும் குமரன் பத்மநாதன் அவர்கள் தெரிவித்து உள்ளார். அவர் மூன்று கட்டமாக ஆங்கில இணைய தளம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

இந்த செவ்வியின் தமிழாக்கம் பிரபாகரனின் விசுவாசிகள் பலரை திருப்தி கொள்ள வைத்ததோடு, அவர்கள் தமது தலைவர் மீது வைத்திருந்த மரியாதையினை இரட்டிப்பாக்கியது. ஈழத் தமிழ் மக்களின் பெரும் பகுதியினரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வந்த பிரபாகரன் எப்பாடு பட்டாவது தமிழ் ஈழத்தினை பெற்றெடுப்பார் என்றே அவர்கள் நம்பி இருந்தனர். இந்த திடமான நம்பிக்கையே ஈழ தமிழர்களின் பெரும்பகுதியான மக்களுக்கு இருந்து வந்தது. இப்படிப்பட்ட எமது தலைவன் சரண் அடைந்து கேவலமான முறையில் கொல்லப்பட்டு இருக்காது வீரமரணம் எய்தியிருக்க வேண்டும் என்பதோடு, அவரின் வரலாறு கொச்சைப்படுத்தலுக்கு உள்ளாகாது வீர காவியமாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள்.
அவர்களுக்கு இருக்கும் இவ்வகையான மனநிலையினை நன்றாக விளங்கி வைத்திருந்த கே.பி அவர்கள் பிரபாகரன் இறுதி வரை போரிட்டு மடிந்தாக தெரிவித்து பிரபாகரனின் விசுவாசிகளிடம் அனுதாபம் பெற்றுள்ளார். கே.பி அவர்களை பொறுத்த வரையில் அரசுடன் இணைந்து செயறபடும் ஏனைய புலி தலைவர்களை போல் அல்லாது அவர் ஒரு புத்திஜீவி என்பதுடன் சாதுர்யமாக செயற்படக் கூடியவரும் ஆவார். ஆகையினாலேயே அரச பாதுகாப்பில் இருந்தவாறு புலம் பெயர்ந்த புலிகளை இலங்கைக்கு அழைத்து பேச்சுக்களை நடத்தி வருவதுடன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினையும் அவரினால் ஸ்தாபிக்க முடிந்தது.
கே.பி அவர்கள் பிரபாகரனின் இறப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில் மிகவும் புத்திசாதூர்யமாகவே பதில் வழங்கியுள்ளார். புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்களின் ஆதரவை கருத்தில் கொண்டும், இலங்கை அரச தலைவர்களை போர்கால குற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் அவரின் பதில்கள் அமைந்திருந்தன.
ஈழத்தமிழ் மக்களின் பெரும்பகுதியினரின் அபிமானத்திற்கு உரியவராகவும், தமிழ் ஈழத்தினை பெற்றுத்தரக் கூடியவர் என்ற நம்பிக்கைக்கு உரியவருமாக இருந்த பிரபாகரனை கொச்சைப்படுத்துவதோ அல்லது அவரின் வரலாற்றிக்கு களங்கம் விளைவிப்பதோ எனது நோக்கம் அல்ல. எமது தற்போதைய சமூகத்திற்கும்,எதிர்கால சந்ததியினருக்கும் தவறான செய்திகளை நாம் விட்டு செல்ல கூடாது என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டினால் வடக்கி கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண ஆட்சி முறை ஈழத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுத்தி கொடுக்கப்பட்டது.
இந்த 13 ஆவது சட்ட திருத்தத்தில் முதல் முறையாக இலங்கையில் தமிழ் மொழி அரச கரும மொழியாக்கப்பட்டதோடு , வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஈழத் தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. புலிகள் இதனை எதிர்த்தமையினால் இந்த மகத்துவம் வாய்ந்த சட்ட திருத்தம் பாமர மக்கள் மத்தியில் மறைக்கப்பட்டது. சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா ஆட்சிகாலத்தில் ஜே.வி.பி கட்சியானது வட கிழக்கு மாகாணங்களை மீண்டும் பிரிப்பதற்கு வழக்கு தாக்கல் செய்தபோதுதான் வட கிழக்கு மாகாணங்கள் இந்திய இலங்கை உடன்படிக்கை மூலம் இணைக்கப்பட்டிருந்த விடயம் அப்பாவி தமிழ்மக்கள் பலருக்கு தெரிய வந்தது.
புலிகளை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக எமது மூத்த தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் கூட இதன் மகத்துவத்தினை எமது மக்களுக்கு எடுத்துரைக்கவில்லை.இந்த ஒரு அரிய வாய்ப்பினை புலிகள் தவறவிட்டதோடு எமக்கு ஆதரவாக இருந்த ஒரு நாட்டையும் எதிரிக்கு நண்பனாக்கியது.
புலிகளின் தலைவர் சரண் அடையாது இறுதிவரை போரிட்டு வீர மரணம் எய்தியாக கூறியதினை ஏற்றுக் கொள்ளும் புலி ஆதரவாளர்கள், வை.கோ குறித்து அவர் கூறும் கதைகளை பொய்யென மறுக்கின்றனர்.
சரண் அடைந்த புலி போராளிகளை அரச படையினர் சுட்டுக்கொல்லும் காட்சிகளை நம்ப தயாராக இருக்கும் புலி ஆதரவாளர்கள், பிரபாகரனின் பிழந்த மண்டையினை தைக்கும் காட்சியானது ,வேண்டும் என்றே உருவாக்கப்பட்ட காட்சிகள் என்கின்றனர். புலிகளின் தலைவர்கள் முல்லிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டு இருக்கும் போது, இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி நேர பிரட்சாரங்கள் நடைபெற்ற வாறு இருந்தது. இலங்கை தமிழர்களின் நலன் குறித்து பேசுவதில் அனைத்து கட்சிகளும் மிகவும் அக்கறையாக இருந்த காலகட்டம். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியும் தனது பங்கிற்கு தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கான முயற்சியினை ப.சிதம்பரம் தலமையில் மேற்கொண்டு இருந்தது. எங்கே இந்திய அரசு தற்காலிகமாக யுத்த நிறுத்தத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுவிட்டால் ஒரு தர்மசங்கடமான நிலைமை எமக்கு ஏற்பட்டு விடும் என்று இலங்கை அரசு திகைத்து நின்றது. இந்தியாவின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் இலங்கைக்கு அப்போது இருந்த இக்கட்டான சூழலை வை.கோ அவர்கள் தீர்த்து வைத்து இருந்தார். இந்த முயற்சியானது வெற்றியளிக்குமானால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகளின் வெற்றிக்கு உதவிவிடும் என்பதினால் , கே.பி அவர்கள் கூறியது போன்று வை.கோ அவர்களே இதனை தடுத்து இருந்தார். தேர்தலில் அ.தி.மு.கழகத்தின் தலமையிலான கூட்டு தமிழகத்தில் 40 ஆசனங்களை வெற்றெடுக்கும் என்றும், அதன் பின்னர் மத்தியில் தமது சொல்லினை கேட்பதற்க்கு தயாராக இருப்பார்கள் என்றும் வை.கோ அவர்கள் நடேசனுக்கு தெரிவித்தமையினால் , இதனை நம்பிய பிரபாகரன் ப.சிதம்பரத்தின் முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து இந்திய தேர்தல் முடிவுவரும் வரையில் காத்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் மே மாதம் 16ஆம் திகதி முற்றாக வெளிவந்த நிலையில் மத்தியில் காங்கிரங்கட்சியே மீண்டும் ஆட்சி கைப்பற்றியதோடு, தமிழகத்தில் வை. கோ உட்பட அ.தி,மு.க படு தோல்வியை தழுவிய செய்தி பிரபாகரனுக்கு பெரும் ஏமாற்றத்தினை கொடுத்தது. இந்திய தேர்தல் முடிவுகள் 16 ஆம் திகதி வெளிவந்த பின்னர் 17 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர், 18 ஆம் திகதி அதிகாலை புலிகளின் தலைவர்கள் படையினரிடம் சரண் அடைவது என்ற முடிவினை மேற்கொண்டு இருந்தார்கள். இவர்கள் சரண் அடைந்தபோது சிலர் உடனேயே கொல்லப்பட்டார்கள். சிலர் கொழும்பு எடுத்து செல்லப்பட்டு , மீண்டும் வன்னிக்கு கொண்டுவரப்பட்டு கோரமாக கொல்லப்பட்டார்கள். அந்த காட்சிகளை எல்லோரும் ஒளிநாடாக்களில் பாத்திருந்தார்கள்.
வை.கோ மட்டும் தனது அரசியலை கருத்தில் கொள்ளாது பிரபாகரனை காப்பாற்றுவதினை கருத்தில் கொண்டு செயற்பட்டு இருப்பாரே ஆயின், சில வேளைகளில் பிரபாகரன் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். தேர்தல் முடிவுகள் எப்படியும் வரலாம் அதற்காக காத்திராது உங்கள் உயிரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் என்று வை.கோ அவர்கள் நடேசனுக்கு அறிவுரை வளங்கியிருந்தால்! பிரபாகரன் இந்திய தேர்தல் முடிவுகள் வரும் வரையில் 16 ஆம் திகதி வரையில் காத்திருந்திருப்பதினை தவிர்த்திருப்பார். வை.கோ ஒரு வாயாடி என்பது இறுதிநேரத்திலேயே பிரபாகரனுக்கு தெரியவந்தது. இவர் தனக்கே ஒரு ஆசனத்தினை பெறமுடியாது போயுள்ளாரே, 40 ஆசங்களை வெல்லுவோம் என்று எப்படி இவர் எங்களுக்கு உறுதியாக கூறினார் என்று பிரபாகரன் இறுதிவேளையில் நினைத்திருக்க கூடும். தனது சுயநலத்திற்காக ப.சிதம்பரம் மெற்கொண்ட முயற்சியை வை.கோ தடுத்திருந்தார் என்று பிரபாகரன் கொல்லப்பட்டு அடுத்த முன்று தினங்களில் நான் எழுதியிருந்தேன். இதனை கே.பி அவர்கள் இப்போதே கூறியுள்ளார்.
தமிழக தலைவர்கள் சிலர் ஈழத்தமிழர்களுக்காக உதவுவதாக நினைத்து செய்யும் செயல்கள் பல ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பான முடிவுகளை கொடுத்து வந்துள்ளது. இலங்கை படையினரால் சுற்றி வழைக்கப்பட்டு இருந்த பிரபாகரன் அவரது குடும்பம், மற்றும் ஏனைய புலிதலைவர்களை எப்பாடு பட்டாவது காப்பாற்றும் வோம் என்று கூறி பெருமளவு நிதிகளை பெற்றுக்கொண்ட தமிழ் தலைவர்கள் பலர் , இந்திய மத்திய அரசை ஆத்திரப்படுத்தினார்களே தவிர ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. தற்பொழுது சிறையில் இருக்கும் இயக்குனரே அதிக பணம் பெற்றுக் கொண்டதாக அறியப்பட்டது. அரசியல் கட்சியை ஒன்றினை வைத்திருக்கும் உடல் கட்டுமஸ்தான குமார் நடிகரை இவர் அணுகி இலங்கை தமிழர்கள் என்ற போர்வையில் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு கேட்டிருந்தார். தனது கட்சி புதியது என்றும் அதனை வளர்ப்பதற்கு மாதம் 12 லட்சம் தேவை என்றும் அதனை கொடுத்தால் நானும் உங்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பேன் என்று அவர் கேட்டிருந்தார். முழுப்பணத்தையும் தனது பைக்குள் போட்ட இயக்குனர் இதற்கு மறுத்ததினால் கட்டுமஸ்தான குமார் நடிகர் ஒதுங்கி கொண்டார்.
பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் பெருமளவு பணத்தை வாங்கிய இயக்குனர் செயறபட்ட அளவு போதாது என்று நோர்வே புலிகள் ஒரு தொகையை திருப்பி தருமாறு கேட்டாவாறு இருந்தனர்.இதனாலேயே பிரபாகரனின் உருவம் பொறித்த சட்டையை அணிந்வாறு , தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கினால் தமிழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களை கொல்வேன் என்று சபதமிட்டு அதிகப்பிரசங்கியாக நடந்து கொண்டு சிறை சென்றார். இவ்வாறு பேசினால் தனக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது அந்த இயக்குனருக்கு தெரியாது இருக்க முடியாது. அப்படி தெரிந்தும் ஏன் இப்படியாக நடந்து கொண்டார் என்றால்! நோர்வே புலிகளின் தொந்தரவு இல்லாது பாதுகாப்பாக இருப்பதற்கான இடம் சிறைச்சாலை என்பதினால் அவர் புத்திசாலித்தனமாக புகலிடம் தேடிக்கொண்டார்.
புலி உறுப்பினர்களை காட்டிலும் சில தமிழக தலைவர்கள் தாமே தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொள்வார்கள். கரும்புலி உறுப்பினர்களை காட்டிலும் தமக்கே பிரபாகரன் மீது அளவிடமுடியாத பிரியம் இருப்பதாக காட்டிக்கொள்வார்கள். ஆகையினாலேயே பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று புலிகளே ஒப்புக்கொண்டு தமது தலைவரின் படத்தினை சாமி அறைக்குள் மாற்றிய பின்னர் , இல்லை அவர் இறக்கவில்லை என்று சீமானும், வை.கோ அவர்களும் அடம் பிடிக்கின்றார்கள். பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்தவுடன் அவர் கொல்லப்படவில்லை என்று கே.பி அறிவித்து இருந்தார். பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று விடுதலை புலிகளின் சர்வதேச தொடர்பாளர் தம்பி கே.பி கூறியதை கேட்டு நான் உள்ளம் குளிர்ந்தேன்,துள்ளிகுதித்தேன் என்று வை.கோ அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
இரண்டு தினங்கள் கழித்து பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை கே.பி உறுதிப்படுத்திய போது. இதற்கு வை.கோ தனது கட்சி பத்திரிகையில் எழுதுகையில் கே.பி ஒரு துரோகி ,அவர் சர்வதேச நாடுகளின் வலைக்குள் வீழ்ந்துவிட்டார். இவரை விடுதலை புலிகளின் சர்வதேச தொடர்பாளாராக பிரபாகரன் நியமிக்கவில்லை, இவர் தானாகவே தன்னை சர்வதேச தொடர்பாளராக அறிவித்து கொண்டார், என்றெல்லாம் கே.பி அவர்களை திட்டி தீர்த்திருந்தார். இப்படியாக நேரத்திற்கு நேரம் மாறுபட்ட கருத்துக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வரும் வை.கோ அவர்களை எப்படி அழைப்பது? தமிழக அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று சரத் பொன்சேகா கூறியதற்கு இவர் ஒரு உதாரணம் ஆகாதா?
V.P எய்தியது வீர மரணமா?
வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரண் அடையவில்லை, அவர் படையினருடன் ஆன மோதலிலேயே கொல்லப்பட்டார் என்று கே.பி தனது செவ்வியில் தெரிவித்து இருந்தார். பெரும்பகுதியான ஈழத் தமிழர்களின் மனதுகளில் வீரத்தலைவனாகவும், மதிப்பிற்கு உரியவராக இருக்கும் பிரபாகரனின் இறப்பினை களங்கப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஆனால் ஒரு தவறான தகவல் எமது மக்கள் மத்தியில் சரித்திரமாகவும், வரலாறாகவும் பதிவாகிப் போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தினால், இது குறித்து ஆராயவேண்டியுள்ளது.
மடுவை படையினர் கைப்பற்றிய போது பிரபாகரன் தன்னை பாதுகப்பதற்கான திடமான திட்டத்தினை வகுத்திருக்க வேண்டும். கிளிநொச்சி பகுதி பறிபோனதிற்கு பிற்பாடு , கடற்கரை கரை பிரதேசங்கள், குறிப்பாக முல்லைதீவு கடற்கரை பிரதேசங்களை இழந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியது மிகவும் தமாதமான நடவடிக்கையாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழ தமிழர்களின் ஒருபகுதியினரின் வீதிமறிப்பு போராட்டங்களின் மூலம் யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கை கைகொடுக்கவில்லை. வெளிநாடுகளில் ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினரால் நடந்த்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்களை எந்த நாடுகளும் கண்டுகொள்ளவில்லை.
வணங்காமண் கப்பல் வன்னிக்கடல் பகுதிக்கு திட்டமிட்ட நேரத்திற்கு வந்து சேரவில்லை. அப்படி அந்த கப்பல் வந்திருந்தாலும் அதனால் பயன் ஏற்பட்டு இருக்குமோ என்பது ஐயமே ஆகும். இறுதி நேரத்தில் தமது முழுப்பலத்தையும் திரட்டி படையினரின் சுற்றி வழைப்பினை உடைத்துக் கொண்டு வெளியேறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கைகூடவில்லை. இந்த உடைப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் கடாபி, தீபன் என தளபதிகள் உட்பட 452 போராளிகள் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்த முயற்சியும் கைகூடாமல் போனது.
இறுதியில் வை.கோ வின் மதியுரைக்கு இணங்க இந்திய தேர்தல் முடிவுகளை காத்திருந்து அதுவும் நல்ல செய்தியை கொடுக்கவில்லை.
இந்த முயற்சிகள் எல்லாம் கைகூடாமல் போன பின்னர், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஆயுதங்களை கையளித்துவிட்டு சரண் அடைவதே ஒரே வழி என்ற முடிவிற்கு வந்தனர். இதன் முதல்கட்டமாகவே நாம் எமது ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்று புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அறிவித்து இருந்தார். தாம் சரண் அடையும் போது தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் யார் தருவது என்ற கேள்வி எழுந்தபோது நோர்வே நாட்டு அரச சார்பு நிறுவனம், மனிதநேய அமைப்புக்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், தமிழ்தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நோர்வே நாட்டு அமைச்சர் ஒருவர் என்று பலரின் உத்தரவாதங்கள் கோரப்பட்டு இருந்தன. புலிகளின் தலைவர்கள் வெள்ளை கொடிகளுடன் சரண் அடைய உள்ளார்கள் என்ற செய்தி இலங்கை அரசிற்கு முன்னரே தம்மால் அறியப்படுத்தப்பட்டதாக நோர்வே நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் தெரிவித்து இருந்தமை இங்கு குறிப்பிடதக்கதாகும்.
இப்படியெல்லாம் பல தரகர்கள் பிரபாகரன் சரண் அடைவது குறித்த பேச்சுக்களை இலங்கை அரசுடன் திரைமறைவில் நடத்தி இருந்தார்கள். புலிகள் மட்டும் வெளிப்படையாக அனைத்து சர்வதேச ஊடகங்களுக்கும் அறியப்படுத்திவிட்டு சரண் அடைந்திருப்பார்களாயின் , ஓரளவிற்கு அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் புலிகள் தமிழர்கள் மத்தியில் தம்மை வீர மறவர்களாகவும், வெல்ல முடியாதவர்களாகவும் காட்டிக்கொண்டமையினால், வெட்கமுற்று, கூனிக் குறுகி திரை மறைவு நாடகத்தினை நடத்தி இருந்தார்கள். இறுதி வேளையில் வேறு மாற்று வழியில்லாது இலங்கை அரசின் நிபந்தனைக்கு இணங்கி தாக்குதலை நிறுத்தும் போது கூட நாம் எமது ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்று, அதனை அழகு தமிழில் அறிவித்து இருந்தார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் படையினரிடம் சரண் அடையவில்லை என்று கே.பி கூறுவதும், சரண் அடைந்த புலி தலைவர்களை அரச படைகள் கொல்லவில்லை என்று சர்வதேச சமூகத்திற்கு அரசு கூறுவதும் அவரவர் நலன்களை காப்பாற்றுவதற்காகவே என்பது நான் எழுதித்தான் தெரியவேண்டியதில்லை. சரண் அடைந்த பிரபாகரனையும் ஏனைய புலி தலைவர்களையும் அரச படைகள்தான் கொலைசெய்தன என்று தெரிவித்து, கே.பி அவர்களே சர்வதேச நீதிமன்றத்திற்கு சாட்சியாக இருக்க முடியுமா? இலங்கை அரசு மீதான போர்கால குற்றசாட்டிற்கு (war crime) ஆதரவாக கருத்து கூற முடியுமா?
அரச தரப்பினை பொறுத்தவரையில் சரண் அடைந்த புலி தலைவர்களை தாம் கொல்லவில்லை என்று சர்வதேச நாடுகளுக்குதான் கூறுகின்றார்களே தவிர தென்னிலங்கை மக்களுக்கு அல்ல. பிரபாகரனை உயிருடன் பிடித்து வந்து அரச உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் அவரை பார்த்துவிட்டு துடிதுடிக்க கொன்றாதாகவே தென்னிலங்கை மக்கள் மத்தியில் செய்திகள் பரப்பப்பட்டன. பிரபாகரன் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கும் காட்சிகள் வேண்டுமென்றே கசியவிடப்பட்டு இருந்தன. பிரபாகரனின் மனைவியும் இரண்டாவது மகன் பாலச்சந்திரனும் கனடாவில் உயிருடன் இருப்பதாக வதந்திகள் வந்து சில நாட்களில் பாலச்சந்திரன் நெஞ்சில் குண்டு காயத்துடன் இறந்து கிடக்கும் கலர்படம் இணையத்தளங்களில் வெளியாகின. இவைகள் எல்லாம் என்னத்தினை காட்டுகின்றது என்றால்! புலிதலைவர்களையும் அவர்களது குடும்பத்தினரை நாம் இல்லாது செய்துவிட்டோம் என்ற செய்தியினை தென்னிலங்கை மக்களுக்கு வீரத்துடன் அரச தலைவர்கள் கூறுவதாகவே இருந்தது.
பிரபாகரன் வீர மரணம் எய்தியதாக கூறும் செய்தியை கே.பி அவர்கள், சிங்கள ஊடகவியாளர்களை அழைத்து , பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து இருந்து தென்னிலங்கை மக்களுக்கு கூறுவாரா?
archunan2009@live.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக