திங்கள், 27 செப்டம்பர், 2010

முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

>
1975 ஆம் ஆண்டு ஜீலை மாதம் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்தது.

1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர்.

2. ஒரு புறத்தில் சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது.

தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலச
v:shapes="_x0000_i1036">
ஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்குக் காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் "ஹீரோ" வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது. ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை; மறு புறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.

தமிழ் பேசும் மக்கள் மீதான தேசிய இன அடக்கு முறையும், வன் முறை வடிவில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பொலீசார் எமக்குப் பெரும் தலையிடியாகின்றனர். அவர்களை என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு முன்னமே சிலவேளைகளில் அவர்கள் எம்மை நோக்கி வந்துவிடுகின்றனர்.

21 ஓகஸ்ட் 1975 கிருபாகரனும், சில நாட்களில் 19 செப்டெம்பர் 1975 கலாபதியும் கைதுசெய்யப்பட்ட பின்னர் தான் இலங்கை அரசின் அதிகார மையத்திற்கு துரையப்பா கொலை என்பது சில இளைஞர்களின் கூட்டு நடவடிக்கை என்பது தெரிய வருகிறது. அரசு விழித்துக்கொள்கிறது. ஒரு உள்ளூர் உளவு வலையமைப்பை உருவமைக்கும் வேலையை முடுக்கிவிடுகிறது.
துரையப்பா கொலை தொடர்பாக கலாபதி கைது செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி கொலைசெய்யப்பட வேண்டும் என்பதில் பிரபாகரனும் நாங்களும் ஆர்வமாக இருந்தோம். அவரின் கைதிற்கு மட்டுமல்ல, கலாபதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவரைச் சித்திரவதை செய்வதற்கும் கருணாநிதிதான் முன்நின்றார் என்பதும், நாம் அறிந்திருந்தோம், அவரின் சித்திரவதையில் கலாபதியின் காதைப் பலமாகத் தாக்கி சேதப்படுத்தியிருந்தார் என்று தம்பி அடிக்கடி கூறுவார். கருணாநிதியின் சித்திரவதையின் கோரத்தால் கலாபதியின் ஒருபக்கக் காதின் கேட்கும் தன்மை கூடப் பாதிக்கப்பட்டிருந்து.

14 பெப்ரிவரி 1977 இல் காங்கேசந்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி மாவிட்டபுரத்தில் வைத்துக் கொலைசெய்யப்படுதல் என்பது தான் தமிழ் ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் நடைபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலைச்சம்பவம்.

பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. மாவிட்டபுரம் நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் செல்ல நாம் முடிவிற்காகக் காத்திருக்கிறோம். இறுதியில் பிரபாகரன் குறிபார்த்துச் சுட்டதில் கருணாநிதி அந்த இடத்திலேயே மரணமாகிறார்.

அப்போது தமிழர் கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்களும், இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி இருந்தமையும் எமது போராட்டதை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. கருணாநிதி இறந்து நிலத்தில் வீழ்ந்த பின்னர் உணர்ச்சிவயப்பட்ட பிரபாகரன் அவரின் அருகே சென்று அவருடைய காதினுள் மறுபடி துப்பாக்கியால் சுட்டதாக எம்மிடம் கூறினார். கலாபதியின் காதைச் சேதப்படுத்தியற்கான பழிவாங்கல்தான் அது. பழிக்குப் பழிதீர்க்கும் மனோபாவம் நிறைந்த, உணர்ச்சி வயப்பட்ட தாக்குதலின் கோரம் அங்கே வெளிப்பட்டு மனிதத்தை நோக்கி வினாவெழுப்பியது.

பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர். யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி முகாமிற்கோ, பண்ணைக்கோ வரும் போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று பஸ் தரிப்பிடங்களின் முன்னதாக வண்டியை விட்டு இறங்கி நடந்தே வருவார். அடிக்கடி யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது வழமை. தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற உலகம் இருப்பதாகவே எப்போதும் உணர்வது போன்ற தோற்றப்பாட்டையே அவர் உருவாக்குவார்.
ஒன்றாக உறங்கும் வேளையிலும் சிறிய சலசலப்புகளுக்கே விழித்துக்கொள்வார். துப்பாக்கி இல்லாமல் எங்கும் வெளியே செல்வதில்லை. தனியேயாகவோ அல்லது கூட்டாகவோ சென்றாலும் தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைச் செருகி வைத்துக்கொள்வார். இவரோரு கூடச் செல்பவர்களையும் துப்பாக்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவது வழமை. நான் கூட பிரபாகரனுடன் செல்லும் போது துப்பாக்கியின்றி வெளியே செல்வதில்லை.

இதே வேளை எமது எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருவகையான மக்கள் சாராத தனிமனிதப் படுகொலைகள் அல்லது குற்றச் செயல் என்ற வடிவத்தைக் கொண்டதாக அமைகிறது. பொலிஸ் அதிகாரிகளும், அரச ஆதரவாளர்களும், உளவாளிகளும் என்ற முக்கோண வலைப்பின்னலை உடைத்து, இலங்கை அரச இயந்திரத்தை மக்கள் தொடர்பிலிருந்து பலவீனப்படுத்தலே எமது வரையறுக்கப்படாத, ஆனால் செயல்ரீதியான நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வேளையில் துரையப்பா கொலைவழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு இந்தியா சென்றிருந்த பற்குணம் இலங்கை திரும்புகிறார்.

பற்குணம் இலங்கைக்கு வந்த நிகழ்வானது எமக்குப் புதிய உற்சாகத்தை வழங்குகிறது. தலைமறைவாக வாழ்ந்த எங்களை மிகுந்த பிரயத்தனத்தின் பின்னர் அவர் சந்திக்கிறார். சில காலங்களின் பின்னர், அவர் எமது மத்திய குழு உறுப்பினராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இந்தச் சூழலில் சண்முகநாதன் என்ற பொலிஸ் அதிகாரி எமக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிகிறோம். இவரைப் "போட்டுத் தள்ள வேண்டும்" என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுகிறார். கருணாநிதி கொலை தந்த உற்சாகமும் உத்வேகமும் சண்முகநாதனைக் கொலைசெய்ய வேண்டும் என்ற உறுதியை வழங்குகிறது.

அவரை நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், தம்பி பிரபாகரனும், உரும்பிராய் பாலாவும் சண்முகநாதனை, இணுவிலில் உள்ள தேனீர்க் கடையின் முன்னால் காண்கின்றனர். தற்செயலாக அங்கு அவரைக் கண்ட இருவரும் உடனடியாகவே அவரைக் கொலைசெய்யத் திட்டமிடுகின்றனர்.

காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் இன்னுமொரு பொலீஸ் அதிகாரியுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றவர் யாரென்பதையும் பிரபாகரனும் பாலாவும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மற்றைய பொலிசின் பெயரும் சண்முகநாதன் தான். அவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை பார்ப்பவர். கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர் என்பதையும் பாலாவும் பிரபாகரனும் தெரிந்து வைத்திருந்தனர். கொல்லப்படவேண்டிய காங்கேசந்துறை சண்முகநாதனை பிரபாகரன் குறிவைக்கை அவர் பிரபாகரனை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டு தரையில் விழுத்த முயற்சிக்கும் வேளையில், கைத்துப்பாக்கியை வைத்திருந்த பாலா அவரை சுட்டுக்கொலைசெய்து விடுகிறார்.

அதேவேளை அங்கு நின்றிருந்த மற்றைய சண்முகநாதனை நோக்கி, தப்பி ஓடிவிடுமாறு பாலா சத்தமிடுகிறார். அதை அவர் மறுத்து, தனது சக பொலீசைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட அவரைப் பிரபாகரன் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிடுகிறார். 18ம் திகதி மே மாதம் 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை வடபகுதி எங்கும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில், திருப்பித் தாக்குவதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.
இன்னும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வட கிழக்கெங்கும் மேடைகளும், உணர்ச்சிக் கோசங்களும், தமிழுணர்வுப் பாடல்களும், உதய சூரியன் கொடியுமாகக் களைகட்டியிருந்தது. சந்திகளும், சாலைத் திருப்பங்களும், மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் பேசிக்கொள்வதை நாமும் கேட்கிறோம். எங்கும் "தமிழ் உணர்ச்சியின்" அலைகள் இந்துமா கடலையும் தாண்டி ஒலித்தது. தமிழ் தேசியத் தணலின் வெம்மை முழு இலங்கையையும் எரித்துக் கொண்டிருந்தது 

பற்குணம் இரண்டாவது உட்படுகொலை ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

சில மாதங்கள் இடைவெளியில் இருவேறு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன. இவையெல்லாம் எமது இரத்ததில் புதிய நம்பிக்கை அணுக்களை உருவாக்கியிருந்தது. அனைவருக்கும் அதீத உற்சாகம் பொங்கியது. தமிழீழம் மிக அண்மையில் எட்டிவிடும் தூரத்திலேயே இருப்பதாக உணர்கிறோம்.

.
தனிமனிதப் படுகொலைகள் என்றாலும் உணர்ச்சியின் உந்துதலுக்கு உட்படுத்தப்பட்ட எமக்கெல்லாம் அவை தாக்குதல்கள் தான். மக்கள் போராட்டங்கள் பற்றியும் அதற்கான அரசியல் வழிமுறை பற்றியும் அறிந்து வைத்துக்கொண்டா இவற்றைத் திட்டமிட்டோம்!

எமது தோளில் புதிய சுமையை உணர்கிறோம். பற்குணமும் இணைந்துகொள்ள விரிவாக்கப்பட்ட மத்திய குழு ஒன்று கூடல்களை பல தடவை நிகழ்த்துகிறோம். ஒரு புறத்தில் உற்சாகத்தில் மக்கள் மக்கள் திளைத்திருக்க மறுபுறத்தில் நாமும் எமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தல் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பற்குணம் இந்தியாவில் வாழந்த வருடங்களில் ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் (EROS) உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அருளர் என்ற அருட்பிரகாசத்துடன் ஏற்பட்ட தொடர்புகளூடாக அரசியல் விடயங்களில் அக்கறை உடையவராகவும் அதே வேளை ஈரோஸ் அமைப்பின் அனுதாபியாகவும் கூட மாற்றமடைந்திருந்தார்.

எமது மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பிரபாகரனிற்கு அரசியல் விடயங்களில் அக்கறை இல்லை, எமக்கு என்று அரசியல் நிலைப்பாடும் அரசியல் வழிநடத்தலும் தேவை என்ற கருத்தைப் பற்குணம் முன்வைக்கிறார். பிரபாகரனைப் பொறுத்தவரை பலமான ஒரு இராணுவக் குழு தேவை என்பதே பிரதான நோக்கமாக இருந்தது. இந்த விவாதங்கள் எல்லாம் ஒரு குறித்த காலத்தின் பின்பாக, குறிப்பாக மத்திய குழு விவாதங்களின் போது பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையிலான முரண்பாடாக எழுகிறது. பிரபாகரன் அரசியலற்ற வெறும் இராணுவச் சிப்பாய் போலச் செயற்படுவதாகவும் , ஒரு விடுதலை இயக்கத்தை வழி நடத்தத் தகமையற்றவர் என்ற கருத்தையும் கூட்டங்களில் முன்வைக்கிறார். இதற்குப் பிரபாகரனிடம் பதில் இருக்கவில்லை.

அதே வேளை பற்குணம் புகைப்பிடிகும் பழக்கததைத் தவிர சந்தர்ப்பங்களில் மதுபானம் அருந்தும் பழக்கததையும் கொண்டிருந்தார்.தவிர, இந்தியாவிலிருந்து திரும்பியதும் இந்தியாவில் பெண்களுடன் தொடர்புகள் கொண்டிருந்ததாகவும் எமக்கெல்லாம் கூறினார். மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரன் இது குறித்து விவாதங்களை முன்வைக்காவிட்டாலும், அதற்கு வெளியில் எம்மைத் தனித்தனியாகச் சந்திது, பலதடவைகள் பற்குணத்தின் இயல்புகள் குறித்து எம்மிடம் குறைகூறுவது வழமை.பற்குணம் ஒழுக்கமற்றவர் என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுவார்.

பிரபாகரனைப் பொறுத்தவரை தேனிர், கோப்பி போன்றவற்றை கூட அருந்தாத தூய ஒழுக்கவாதியாகவே காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை கடைப்பிடித்திருந்தனர்.

பிரபாகரன் மீதிருந்த தனிமனிதப்பற்று என்பது பற்குணம் கூறுவதை ஏற்கத் தடையாக இருந்தது. பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையில் நிகழும் விவாதத்தில் நாமெல்லாம் மௌனம் சாதித்தாலும் பிரபாகரனை இந்தியாவிலிருந்து திடீரென வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம் நியாயமாகப்படவில்லை.

பற்குணத்தின் ஊடாக மன்னார் வீதியில் அமைந்திருந்த கன்னாட்டி என்னும் இடத்தில் ஈரோஸ் அமைப்பினர் ஒரு பண்ணை ஒன்றை நடத்திவருவதாக அறிந்தோம். எம்மைப் போலவே சில புதிய உறுப்பினர்களைப் பயிற்றுவிக்கும் இடைநிலை முகாமாகவிருந்த கன்னாட்டிப் பண்ணையிலிருந்த ஈரோஸ் உறுப்பினர்களுடன் எமக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது.
அவ்வேளையில் சங்கர் ராஜி, அருளர்,அந்தோனி என்ற அழகிரி போன்ற ஈரோசின் முக்கிய உறுப்பினர்கள் அங்கு தங்கியிருந்தனர். பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்களில் சில உறுப்பினர்கள் அவர்களிடம் பயிற்சியையும் பெற்றிருந்தனர்.

சில நாட்களுக்கு உள்ளாகவே எமது பூந்தோட்டம் முகாமிற்கு அவர்கள் வருவதும், நாங்கள் அவர்களது முகாமிற்குச் செல்வதுமாக ஒரு நட்ப்பு வளர்ந்திருந்தது. பற்குணம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருந்தாலும், எமது இயக்கத்திற்கும் அரசியல் நடைமுறைகள் தேவை என்பதையும், அரசியலற்ற பிரபாகரன் தலைமைக்குத் தகுதியற்றவர் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.

ஈரோஸ் இயக்கத்தினர் எமது பூந்தோட்டம் பண்ணைக்கு வந்து எம்மோடு உரையாடல்களை நடத்துவார்கள். பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள், பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற விடயங்களை நாங்கள் பேசிக்கொள்வோம். 1977 பொதுத் தேர்தலுக்குச் சில காலங்களின் முன்னர் சங்கர் ராஜி என்ற பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஈரோஸ் உறுப்பினர் எமது முகாமிற்கு வந்திருந்த போது ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. பிரபாகரனோடு சங்கர் ராஜி, பலஸ்தீன விடுதலை இயக்கம் பயிற்சிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அரசியல் விவகாரங்களில் பிரபாகரன் ஆர்வம் காட்டவில்லை. எமக்கு அருகே இருந்த சிறிய இலக்கு ஒன்றை குறிவைத்துச் சுடுமாறு சங்கர் ராஜியிடம் பிரபாகரன் கேட்க, அவரும் அவ்வாறே சுடுகிறார். குறி தவறி வேறு இடத்தில் சூடு படுகிறது. துப்பாக்கியை வாங்கிக்கொண்ட பிரபாகரன் அதே இலக்கைக் குறிவைத்துச் சுடுகிறார். குறி தப்பவில்லை. இலக்கில் நேரடியாகச் சென்று குண்டு துளைத்ததும், ஈரோஸ் இயக்கதிலிருந்து எமது பண்ணைக்கு வந்த அனைத்து விருந்தினர்களும் ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள்.

வங்கிக் கொள்ளை நிகழ்த்தியிருந்த நாம் ஒப்பீட்டளவில் ஈரோஸ் இயக்கத்தை விட வசதி வளங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். பற்குணதின் சிபார்சின் பேரில் ஈரோஸ் அமைப்பிற்குப் பண உதவி செய்வதென்ற கருத்தை எமது மத்திய குழுவைக் கூட்டி விவாதிக்கிறோம். இறுதியில் பிரபாகரனும் அவர்கள் நட்பு சக்திகள் என்ற அடிப்படையில் ஒரு குறித்த பணத் தொகையை வழங்க வேண்டும் என்று முன்மொழிய நாங்களும் அதை ஒத்துக்கொள்கிறோம். இந்த முடிவின் அடிப்படையில் ஈரோஸ் அமைப்பிற்கு 50 ஆயிரம் ரூபா வரையிலான பணம் வழங்கப்படுகிறது. பிரபாகரனுக்கோ எமக்கோ இலங்கை அரசிற்கு எதிரான இன்னொரு இயக்கம் வளர்வதில் எந்த பய உணர்வோ, காழ்ப்புணர்வோ அன்றைய சூழலில் இருந்ததில்லை.

பேபி சுப்பிரமணியம் , தங்கா போன்றவர்களூடாக, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அமிர்தலிங்கம், மாவை சேனானதிராஜா போன்றவர்களுன் இறுக்கமான தொடர்புகள் ஏற்படுகின்றன. சேனாதிராஜா தான் முதலில் எமக்குக் ஏற்பட்ட கூட்டணியின் முதல் நம்பிக்கையான தொடர்பு. அவரினுடாக அமிர்தலிங்கத்தின் தொடர்பு ஏற்படுகிறது. சேனாதிராஜா வீட்டிற்கும், அமிர்தலிங்கத்தின் வீட்டிற்கும் பிரபாகரன் வேறு உறுப்பினர்களோடும் தனியாகவும் செல்வது வழமையாகிவிட்டது. தவிர, மத்திய குழு சார்பிலான சந்திப்புக்கள் நடைபெறவில்லை. பின்னதாக நான் இலங்கைக்குத் திரும்பிச் சென்றதும், மத்திய குழுவுடனான சந்திப்பு ஒன்று நிகழ்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் நானும் அமிர்தலிங்கம் வீட்டிற்குச் சென்றேன் என்பது எனது நினைவுகளில் பதிந்துள்ளது.இவ்வாறான எந்தச் சந்திப்புக்களிலும் பற்குணம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளைகளில், புதிதாக உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான அரசியல் தொடர்புகளையும் பற்குணம் கடுமையாக விமர்சிக்கிறார். கூட்டணியின் அரசியல் என்பது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அதனால் நாங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பற்குணம் விமர்சிக்கிறார். இந்த வேளைகளிலெல்லாம் எனக்குப் பிரபாகரன் சொல்வது தான் நியாயமாகத் தென்பட்டது. ஒருபக்கத்தில் அரச படைகள் மறுபக்கத்தில் தமிழர்கள் இதற்கு மேல் என்ன அரசியல் என்பது தான் பொதுவான மனோபாவமாக என்னிடமும் காணப்பட்டது. மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பிரபாகரன் பக்கம்தான்.

பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையேயான சச்சரவின் நடுவே நாங்கள் மௌனிகளாகவே இருந்தோம்.

ஈரோஸ் இயக்கம் தம்மை அரசியல் ஆளுமை மிக்கவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளோ அரசியல் என்பதெல்லாம் தேவையற்றதாகவே கருதியிருந்தது. இந்தச் சூழலில் ஈரோஸ் என்ற அரசியல் இயக்கம் தமது இராணுவப் படையாகத் தமிழீழ விடுத்லைப் புலிகளை இணைத்துக் கொள்வதற்காக முயற்சி செய்து வந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஈரோஸ் அரசியல் தலைமை வழங்க நாமெல்லாம் அவர்களின் இராணுவக் குழுவாகச் செயற்படுவோம் என்று எதிர்பார்த்தார்கள். தம்பி பிரபாகரனும், நாமும் பற்குணத்தின் ஊடாக அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற எத்தனிப்பதாகக் கருதினோம். பற்குணமும் பல தடவைகள் அவரது விவாதங்களூடாக இதனைத் தெரிவித்திருந்தார். பிரபாகரனைக் குற்றம்சாட்டும் கருப்பொருளாக இதுவே அமைந்திருந்தது.

தொடர்ச்சியான விவாதங்களின் பின்னர் பற்குணம் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவர் தனியே பிரிந்து சென்று புதிய அமைப்பாக இயங்க விரும்புவதாகவும் அதற்காக 25 ரூபா பணமும் ஒரு கைத்துப்பாக்கியும் வழங்குமாறு கோருகிறார். இந்தக் கோரிக்கை வியப்பாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது என்னவோ உண்மைதான்.

பற்குணம் இந்தக் கோரிக்கையை மத்தியகுழுவில் தான் முன்வைக்கிறார். அப்போது பிரபாகரன் ஏதும் பேசவில்லை. மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்ததும் பிரபாகரன் எம்மைத் தனித் தனியே சந்திக்கிறார். அப்போது, இயக்கத்திலிருந்து விலகிச் சென்று புதிய இயக்கம் உருவாக்கினால் மரண தண்டனை என்பதை பற்குணம் மறந்துவிட்டுப் பேசுகிறார் என்றும், இவருக்கு மரண தண்டனை தான் தீர்வு என்றும் எல்லோரிடமும் கூறுகிறார்.

இந்த விடையம் பற்குணத்திற்குத் தெரியாது. அவர் தவிர்ந்த, நான் உள்பட்ட அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும்ன் அவர் கூறுயதை ஆமோதிக்கிறார்கள். நாம் ஒரு இராணுவக் குழு; அதற்கு இராணுவக் கட்டுப்பாடுகள் உண்டு; மீறினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; இயக்கம் முழுவதுமே அழிக்கப்பட்டுவிடும் என்ற கருத்துக்கள் தான் மேலோங்குகிறது. இப்போது நாம் அனைவருமே பற்குணத்தின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம். அவர் கொல்லப்பட வேண்டியவர் தான் என்பது எம்மளவில் முடிபாகிவிட்டது.

இதனிடையே ஜெயவேல் என்பவர் கைது பொலீசாரின் வலைக்குள் சிக்கிவிடுகிறார். எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து ஆடம்பரச் செலவுகள் செய்துவந்ததால் சந்தேகத்தின் பேரில் ஜெயவேல் முதலில் கைதுசெய்யப்படுகிறார். குளிப் பானதினுள் நஞ்சு வைத்துக் கொலைசெய்ய முற்பட போது தப்பித்துக்கொண்ட ஜெயவேல் இப்போது பொலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். விசாரணைகளின் கோரத்தில் அவர் என்னையும் ராகவனையும் காட்டிக்கொடுத்து விடுகிறார்.

இதன் பின்னர் நான் தேடப்படுகிறவன் ஆகிவிடுகிறேன். எனது வீட்டைப் பொலீசார் சோதனையிடுகின்றனர்.

புன்னாலைக்கட்டுவனில் எனது வீட்டைச் சுற்றிவளைத்த பொலிசார், வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுகின்றனர். எனது பெற்றோரை மிரட்டி என்னைப்பற்றிய தகவல்களைக் கேட்கின்றனர். புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் நடவடிக்கைகளை எனது வீட்டிலிருந்தே மேற்கொண்டோம்.

ஜெயவேல் ஊடாக இதனை அறிந்துகொண்ட காவற்துறைக்கு இந்த வழக்கில் நான் முக்கிய எதிரியாகிவிடுகிறேன். புன்னைலைக்கட்டுவனில் பல பகுதிகளிலும் எனது நடம்மாட்டம் தொடர்பான தகவல்களைத் திரட்டுகிறார்கள். இந்த அவசர நிலையைக் கருத்தில்கொண்டு ராகவன், பட்டண்ணா ஆகியோரை இந்தியாவிற்குச் செல்லுமாறு பிரபாகரன் கூறுகிறார். ராகவன் பட்டண்ணா ஆகியோர் புலிகளில் ஆதரவாளர்களாக இருப்பினும் ஜெயவேலுக்கு இவர்களின் தொடர்புகள் இருப்பிடங்கள் என்பன தெரிந்திருந்தது. இதனால் இவர்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதால் பிரபாகரனே இவர்களையும் கூட்டிச் செல்லுமாறு கோருகிறார் தங்கத்துரை யின் கடத்தல் படகு ஒன்ன்றில் மன்னார் சென்று மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் செல்கிறோம்.

நான் நேசித்த தாய் மண்ணைப் பிரிந்த சோகத்தின் மத்தியில் இந்திய மண்ணிலிருந்த நம்பிக்கை அதன் மீதான மதிப்பாகவும் மாறியது. வெறும் உணர்ச்சிச் சமன்பாடுகள் தான் எமது சிந்தனையைத் தீர்மானிக்கும் வரம்புகளாகியிருந்த காலகட்டத்தில் இதைவிட வேறு எதையெல்லாம் எதிர்பார்க்க முடியும்?

அங்கிருந்து சேலத்திற்குச் செல்கிறோம். அங்கே பெரிய சோதி, சின்னச் சோதி என்றி அழைக்கப்படும் வல்வெட்டித்துறையச் சேர்ந்த இருவருடன் நாம் தங்கியிருந்தோம். இவர்கள் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் குழுவைச் சார்ந்தவர்கள். எமக்கு வேறு உழைப்போ பணவசதியோ இல்லாத நிலையில் இவர்கள் தான் எம்மைப் பாதுகாக்கிறார்கள். உணவருந்துதுவதும், உறங்குவதும், தமிழ் சினிமாப் பார்ப்பதும் தான் எமது வேலையாக இருந்தது. சுமார் நான்கு மாதங்கள் வரை சேலத்திலேயே எமது நாட்களைக் நகர்த்துகிறோம்.

உலகம் முழுவதும் எவ்வாறு போராட்டங்கள் முன்னோக்கிச் செல்கின்றன, முற்போக்கு சக்திகளுடனான உறவு, ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்து அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு எமது தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தல் போன்ற எந்த விடயங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் எமக்கு இருந்ததில்லை. பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறுத்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

அப்போதெல்லம் குறைந்த பட்சம் போராட்டங்கள் குறித்தும், அரசியல் குறித்தும், மார்க்சியம் குறித்தும் ஆயிரம் விடயங்களைப் படித்துத் தெரிந்துகொண்டாவது இருக்கலாம் என்று இப்போது வருந்துவதுண்டு. எமது குறுகிய உலகத்துள் எமக்குத் தெரிந்ததெல்லாம் தாக்குதலும் எதிர்த் தாக்குதலும் என்பது மட்டும்தான்.

இதனிடையே தாயகத்தில் பற்குணம் கொல்லப்படுவதற்கான முடிபு உறுதிப்படுத்தப்படுகிறது.

அவ்வேளையில் பற்குணம் கொழும்பிற்கு செல்கிறார். கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினரான நாகராஜா(வாத்தி), பற்குணத்தை புளியங்குழம் முகாமிற்கு அழைத்து வருகிறார். அங்கு இரவிரவாக பற்குணத்துடன் பிரபாகரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நண்பர்களாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவிற்குச் சற்றே பிந்திய வேளையில் பற்குணத்தோடு உரையாடிக் கொண்டு இருக்கையிலேயே அவரைத் தனது கைத்துப்பாக்கியால் பிரபாகரன் கொலைசெய்துவிடுகிறார். அவ்வேளையில் பேபி, தங்கா, நாகராஜா, குலம் போன்றோர் அங்கிருக்கின்றனர். பற்குணம் இறந்து போகிறார்.

துரையப்பா கொலைச் சம்பவத்திற்கான செலவுகளுக்காக தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்து பணம்கொடுத்த பற்குணத்தையே கொலைசெய்ய வேண்டியதாகிவிட்டது என்று பிரபாகரன் பின்னரும் பல தடவைகள் கூறி வருந்தியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது நான் சேலத்திலேயே இருந்ததால் இது எனக்கு உடனடியாகத் தெரியாது.

நாங்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது. மறுபுறத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றியீட்டுகிறது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற அங்கீகாரமாக இத் தேர்தலின் வெற்றி கருதப்பட்டது. 1977 ஜூலை 21ம் பெரும்பாலும் எல்லாத் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களும் பிரிவினைக்கான சுலோகத்தை முன்வைத்துப் போட்டியிட்ட கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர்.

இதே வேளையில் பிரதம மந்திரியாகத் தெரிவு வெற்றியீட்டிய ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தன, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பொலீசாருக்கு எதிரான கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான குழுக்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகவும், இந்த இரு பகுதியினருமே அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இதே வேளை வன்முறையாக நான்கு பொலீசார் யாழ்ப்பாணத்தில் நடந்த கானிவேல் ஒன்றினுள் அனுமதிசீட்டு இல்லாமல் பிரவேசிக்க முயன்ற போது உருவான தர்க்கத்தில் மக்களால் தாக்கப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து உருவான தமிழ் சிங்கள மோதல், இன வன்முறையாக மாற்றம் பெறுகிறது. 12ம் திகதி ஆகஸ்ட் 1977 ஆம் ஆண்டு ஆரம்பமான இவ்வன்முறைகள், அரசின் மறுதலையான ஆதரவுடன், இனப்படுகொலை வடிவத்தை கொள்கிறது.300 தமிழர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்படுகிறார்கள். தமிழர்களுக்கு உரிமை தருவதாகப் பேசி ஆட்சிக்கு வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழர்களதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பிரிவினைக் வாதத்தில் ஆத்திரமடைந்த சிங்கள மக்களின் எழுச்சியே இவ் வன்முறைகள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். 
இந்தியாவிலிருந்து இதை அறிந்த நாம் வெறுப்பும் கோபமும் அடைகிறோம்.

30 நாட்கள் நீடித்த இந்த வன்முறைகளின் சில நாட்களில் பிரபாகரன், மாவை சேனாதிராஜா, காசியானந்தன் ஆகியோர் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் படகு மூலமாக இந்தியாவிற்கு வருகின்றனர்.

பேபி சுப்பிரமணியம், தங்கா போன்றோர் ஊடாக நான் இந்தியாவிலி இருக்கும் வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் புலிகளின் தொடர்பு வலுப்பெற்று வளர்ச்சியடைகிறது. பற்குணத்தின் மறைவிற்குப் பின்னர் புலிகளின் மத்திய குழுவுடனான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்புகள் வலுப்பெறுகின்றன. தேர்தல் வன்முறைகள், ஜெயவர்தன அரசு வெளிப்படையாகவே கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் என்பவற்றின் தொடர்ச்சியாக இச்சந்திப்புக்கள் மேலும் கூட்டணியுடனான இறுக்கத்தை வலுவாக்குகின்றன. பிரபாகரன் நான் இருந்த சேலத்திற்கு வருகிறார். இதே வேளை பேபி சுப்பிரமணியம் விமான மூலமாக இந்தியாவிற்கு வருகிறார்.


நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்தியிகுழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத உடன்பாட்டிற்கு வருகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும், புலிகள் இவற்றிற்கான இராணுவ அமைப்பு என்றும் முடிபிற்கு வருகின்றனர்.

தேர்தல் வெற்றியும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முரைகளும், அவற்றிற்கு எதிரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீராவேசப் பேச்சுக்களும் புலிகள் இந்த முடிபிற்கு வரக் காரணமாக அமைந்தது. இது தொடர்பாக தம்பி இந்தியா வந்ததும் என்னிடம் கூறுகிறார். நானும் அவற்றை எந்த மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ் நாட்டில் இருந்த காலப்பகுதியில் மதுரையில் நடராசா என்ற ஓவிரைப் பிரபாகரன் சந்திக்கிறார். அவர் தான் விடுதலைப் புலிகள் சின்னத்தை வரைந்து கொடுக்கிறார்.


சேனாதிராஜா, காசியானந்தன, பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மரீனா பீச்சில் சந்திக்கிறார்கள். அச்சந்திப்பிற்கு சந்தர்ப்பவசமாக நான் செல்லவில்லை ஆனால் என்னோடு தங்கியிருந்த பட்டண்ணா சென்றார் என்பது நினைவிற்கு வருகிறது. இச் சந்திப்பிற்கான ஏற்பாட்டை சேனாதிராஜா தான் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்.

இவ்வேளையில் இலங்கையில் எமது வழமையான இயக்க வேலைகள் முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காக நான் இலங்கைக்குப் போவதாக முடிவெடுக்கப்படுகிறது. சின்னச் சோதி நான் திரும்பிச் செல்வதற்கான படகை ஒழுங்கு செய்கிறார். மயிலிட்டிக்குப் படகு வந்து சேர்கிறது. மறுபடி சொந்த மண்ணில் கால்பதித்த உணர்வு மேலிடுகிறது!




 

. புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ( பாகம் ஆறு) : ஐயர்


கடத்தல் படகில் இலங்கை வந்து இறங்கியதும், உடனடியாகவே இயக்கவேலைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரு நாட்கள் நிலைமைகளை அவதானித்த பின்னர், எமது பண்ணைக்குச் செல்கிறேன். நான் இந்தியாவில் இருந்த வேளையில் பன்றிக்கெய்த குளம் என்ற இடத்தில் ஒரு பண்ணை 50 ஆயிரம் ரூபாய்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது.

 இது இந்தப் பண்ணை புளியங்குளத்திலிருந்து அதிக தூரத்தில் அமைந்திருக்கவில்லை. அந்தப் பண்ணையிக்கு முதலில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, அதனைத் தேடிச் செல்கிறேன். அங்கே சென்று எமது உறுப்பினர்களுடன் கள நிலைமைகள் குறித்தும், புதிய தொடர்புகள் குறித்தும் உரையாடுகிறேன்.

இரண்டு பண்ணைகளிலுமாக ஏறக்குறைய எட்டு உறுப்பினர்கள் விவசாயம் செய்துகொண்டு முழு நேர உறுப்பினர்களாக வாழ்கிறார்கள். முன்னமே குறிப்பிட்டது போல பண்ணையிலிருப்பவர்கள் இயக்கத்திற்குள் உள்வாங்கப் படுவதற்கான முதல் நிலை உறுப்பினர்களாகவே கருதப்பட்டார்கள். இவர்களைச் சில காலங்களுக்கு பண்ணை வேலைகளில் ஈடுபடுத்தி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதன் பின்னதாகவே இயக்க உறுப்பினர் மட்டத்தில் இணைத்துக்கொள்வது என்பதே எமது திட்டமாகச் செயற்படுத்தி வந்தோம்.

நான் இந்தியாவிற்கு செல்லும் வேளையில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே பண்ணையிலிருந்தனர். ஞானம், சற்குணா, கறுப்பி என்ற நிர்மலன், செல்லக்கிளி ஆகிய நால்வருமே அங்கிருந்தனர். புதிய பண்ணை உருவாக்கப்பட்ட பின்னர், அங்கு புதிய உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். குமணன், சாந்தன், மதி, பண்டிதர் போன்றோர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.'

பண்ணை என்பது எமது இயக்கத்தின் சட்டரீதியான முன்முகமாகவே அமைந்திருந்தது. தேடப்படுக்கிற உறுப்பினர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதில்லை. செல்லக்கிளி தேடப்படுகின்ற ஒருவர் என்பதால் பண்ணையில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை.
இந்தப் புதிய உறுப்பினர்களையும், ஒடுக்கு முறைக்கு எதிரான அவர்களது உணர்வுகளையும் நான் கண்டபோது, என்னுள் என்னையறியாத உத்வேகமும் உற்சாகமும் பிறக்கிறது. தனித் தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம் தவழ்ந்து எழுந்து நடை போடுவதான உணர்வு என்னுள் பிரவகித்த்து. இரண்டு மூன்று தனி மனிதர்களைக் கொண்ட எமது குழு ஒரு இயக்கமாக மாற்றம் பெறுவதைக் கண்முன்னாலேயே காண்பது போலிருந்தது.

நானும் பிரபாகரனும் இல்லாத வேளைகளில் இப்பண்ணை ஏனைய மத்திய குழு உறுப்பினர்களான நாகராஜா, கணேஸ் வாத்தி, , தங்கா, விச்சு போன்ற உறுப்பினர்களாலேயே நிர்வகிக்கப்பட்டது. இவர்கள் மத்திய குழு உறுப்பினர்களாக இருந்த போதும், முழு நேர இயக்க உறுப்பினர்களாக இருக்கவில்லை. இந்த மத்திய குழு உறுப்பினர்களிடமே பண்ணைகளின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. வார இறுதிப்பகுதிகளிலேயே இவர்கள் பண்ணைக்குச் சென்று இயக்க நிர்வாக வேலைகளை கவனித்துக் கொள்வது வழமை.

காடு சார்ந்த வசதி குறைந்த பகுதிகளிலேயே பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் விஷ ஜந்துக்கள், கொசுத் தொல்லை என்பன அதிகமாகக் காணப்பட்டன. இதனால் பண்ணையில் வாழ்ந்த உறுப்பினர்கள் மலேரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வாடும் துன்பியல் சம்பவங்கள் வழமையாகியிருந்தது. இவ்வாறான நோய்களுக்கான மருத்துவ வசதி கூட எம்மிடம் இருந்ததில்லை. மத்திய குழு உறுப்பினர்களே இவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்தனர்.

மத்திய குழு உறுப்பினர்கள் வார இறுதியிலேயே அங்கு செல்லும் வாய்ப்பு இருந்தமையால் பண்ணை உறுப்பினர்களின் நலன்களை முழுமையாகக் கவனித்துக்கொள்ள முடியாத நிலைமையே காணப்பட்டது. இதனால் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் பண்ணை உறுப்பினர்களுக்கும் இடையேயான முரண்பாடு பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. நாடு திரும்பியதும் எனது உடனடியான பிரச்சனையாக இதுதான் அமைந்திருந்தது.

ஆக, பூந்தோட்டம் பண்ணையில்ருந்தவர்களதும், பன்றிக்கெய்தகுளம் பண்ணைகளுக்கிடையே பயணிப்பதும், அவர்களுடைய நலன்களைக் கவனிப்பதும், மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளைக் களைவதும் தான் எனது சுமை நிறைந்த வேலையாக அமைந்திருந்தது. மாவை சேனாதிராஜாவின் தம்பியான தங்காவின் மீதான தப்பபிப்பிராயம் ஏனையோரிலும் அதிகமானதாகவே அமைந்திருந்தது. சில மத்திய குழு உறுப்பினர்களின் பிரமுகத்தனமான மனோபாவம் பண்ணையில்ருந்தவர்கள் மத்தியில் விரக்தி மனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது. சில மாதங்களில் பண்ணைகள் ஒழுங்கிற்கு வருகின்றன. மறுபடி உற்சாகத்துடன் வேலைகள் தொடர்கின்றன.

இந்த வேளையில் சுமார் 3 மாதங்களின் பின்னர் பிரபாகரனும் இந்தியாவிலிருந்து திரும்புகிறார். இவரோடு கூடவே பேபி சுப்பிரமணியம், ராகவன் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர்.

நான் இந்தியாவில் இருந்த வேளையில் பேபி சுப்பரமணியம்
 

ஊடாக, கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளருமான , நில அளவையாளருமான உமா மகேஸ்வரனின் தொடர்பு எமக்கு ஏற்படுகிறது.

கொழும்பிலிருந்து வந்த உமாமகேஸ்வரனிடம் இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான உணர்வும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கியிருந்தது. உமா மகேஸ்வரன் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறார். நான் இலங்கைக்கு வந்தபின்னர் பண்ணையில் என்னோடும் ஏனைய உறுப்பினர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்.


சில நாட்களிலேயே, எமது மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சந்திக்க ஏற்பாடாகிறது. இச் சந்திப்பை அமிர்தலிங்கம் வீட்டிலேயே ஏற்பாடுசெய்யப்படுகிறது. தொடர்ந்து இந்தச் சந்திப்புக்கள் நிகழ்ந்தாலும் நான் மத்திய குழுவோடு இணைந்து ஒரு தடவைதான் அவர்களைச் சந்த்தித்திருந்தேன்.

நான் இந்தியாவில் தங்கியிருந்த வேளையில் இந்தத் தொடர்புகளும் சந்திப்புக்களும் பிரபாகரனோடு பலதடவைகள் நிகழ்ந்திருந்ததால், திட்டமிடலுக்கான பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு என்பதை விட நட்பு அடிப்படையிலான சந்திப்பாகவே எனது அமிர்தலிங்கத்துடனான முதலாவதும் இறுதியானதுமான சந்திப்பு அமைந்திருந்தது.

பிரபாகரன், பேபி சுப்ரமணியம், குலம் போன்றோருடன் தான் இந்தத் தொடர்புகள்

அதிகமாக அமைந்திருந்தன. எது எவ்வாறாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி எமது பிரதான நட்பு சக்தி என்பதற்கும் மேலாக அரசியல் வழிகாட்டிகள் என்பது வரை எமது அனைவரதும் உணர்வுகள் அமைந்திருந்தன. பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை.

ஒரு வகையில் ஒரே அரசியலுக்கான வேறுபட்ட வழிமுறைகளையே நாம் முன்னெடுத்தோம். சிறுகச் சிறுக தொடர்ச்சியாக, 80 களின் இறுதி வரை முளைவிட்ட அனைத்து அமைப்புக்களுமே தமது உள்ளகக் கட்டமைப்புகளில் ஜனநாயகத்தையும், வெளியமைப்பில் புதிய அரசியலுக்கான தேடலிலும் ஈடுபட்டிருந்தாலும், பொதுவான அரசியல் புலிகள் போன்று ஒரே வகையானதாகவே அமைந்திருந்தது என்பதை இன்று மதிப்பீட்டுக்கு உட்படுத்தக் கூடியதாக உள்ளது.

இதே வேளை உமா மகேஸ்வரன் கொழும்பிலிருந்து வந்து எம்முடன் அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்கிறார். இவரது போராட்ட உணர்வும், துடிப்பும், உத்வேகமும் எம்மைக் கவர்ந்திருந்தன. 1977 இன் இறுதிகளில் உமா மகேஸ்வரனையும் மத்திய குழு உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற முன் மொழிவைப் பிரபாகரன் முன்வைக்கிறார். நாம் யாரும் இதில் முரண்படவில்லை. உமா மகேஸ்வரனும் முகுந்தன் என்ற இயக்கப் புனை பெயரோடு தமிழீழ விடுதலை புலிகளில் இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இதே வேளையில் உமா மகேஸ்வரன் 77 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளால் அகதிகளான தமிழர்கள் மத்தியிலும் பல வேலைகளை முன்னெடுத்திருந்தார். டொலர் பாம், கென்ட் பாம் போன்றவற்றின் உருவாக்கத்திலும் பங்கு வகித்திருந்தார். டேவிட் ஐயா, ராஜ சுந்தரம் போன்றோரோடும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். தனது பல்கலைக்கழகக் காலங்களிலிருந்தே தேசியவாத அரசியலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன், அகதிகள் புனர்வாழ்வில் வெளிக்காட்டிய உணர்வுபூர்வமான பங்களிப்பும் ஈடுபாடும் எமக்கெல்லாம் அவர்மீதான மதிப்பை ஏற்படுத்தியது.

1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி ஜெயவர்த்தனா அரசு, புதிய குடியரசு
அரசியல் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. புதிய அரசியல் சட்டம் ஈழத் தமிழினத்தின் அடிமை சாசனம் என்று தமிழர்கள் குரல் கொடுத்தார்கள்.இதே நாளில் நாங்கள் ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று எமது மத்திய குழுவில் முடிவெடுக்கிறோம்.

தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான உணர்வு எல்லோர்  மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கை முழுவது வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன. இவ் வன்முறைகளின் முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது.

 இந்த வேளையில் விமானமொன்றைக் குண்டுவத்துத் தகர்க்க வேண்டும் என்ற கருத்து எம்மில் பலரால் முன்வைக்கப்படுகிறது.

வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில் உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது.

பேபி சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதே வேளை ராகவனும் எம்மோடிருந்தார். பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடாகிறது.

இந்த முடிபுகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் கலந்துரையாடுகிறோம். அந்த வேளையில் சிங்கள மக்கள் அதிகமாகப் பிரயாணம் செய்யும் இந்த விமானத்தில்

அவர்கள் விமானத்தை விட்டு இறங்குவதற்கு முன்னர் குண்டை வெடிக்கவைத்தால் அப்பாவிகள் அனியாயமாக இறந்துபோவார்கள் என்பது குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை. இவ்வேளையில் தான் ராகவன் அப்பாவி மக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிகளின் இழப்புத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ராகவனோடு இணைந்து நானும் ஆட்சேபிக்கிறேன். சாந்தனும் எமது கருத்தோடு உடன்படுகிறார். பொதுவாக அங்கிருந்த மற்றவர்கள், சிங்கள மக்கள் கொல்லப்பட்டால் வருத்தப்படத் தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இறுதியில் நானும் ராகவனும் உறுதியாக வாதிட்டதில், அப்பாவிப் பொதுமக்கள் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் மட்டுமே நேரக்குண்டை வெடிக்க வைப்பது என முடிவாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக