சனி, 25 செப்டம்பர், 2010

20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)
70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியைஅழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.
class="alignleft size-full wp-image-9143" title=praba v:shapes="_x0000_i1027">
மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம்! எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின!! முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது.
இவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்:
1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.
2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.
3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.
4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
நாம் உருவாக்கிய இந்த மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகள்(TNT) என்ற பெயருடனேயே இயங்குகிறது.
எமது சூழல், அரசியல் வறுமை, தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிப் பேச்சுக்கள், சிங்களப் பேரின வாததின் கோரம் என்று எல்லாமே எம்மை சுற்றி நிற்க எமக்கு
நியாயமாகத் தெரிந்தவை தான் இந்தக் கோஷங்கள். நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன.
அரசியல் திட்டமென்று நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த இந்தச் சுலோகங்கள் எல்லாம் பின்னதாக ஆயிரமாயிரம் போராளிகள் கொன்று போடப்படுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. எவ்வாறாயினும் முதல் இயக்கப் படுகொலையை செட்டி தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.
அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன் எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவி, அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.
கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி பத்மநாதன் கொலைகளுக்காக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிபதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.
இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி சொன்னதாக எனக்குச் சொன்னார்.
எங்கோ தெருக் கோடியில், உள்ளூரிலேயே அறியப்பட்டத மூலையில், கால்படத
class="alignleft size-full wp-image-9146" title=praba1 v:shapes="_x0000_i1029">
கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும், உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கமாகவும் பேசப்படுகிற ஒரு சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்றஅனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.
இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.
துரையப்பா கொலை நிகழ்ந்து, எல்லாருமே கைது செய்யப்படுகின்றனர். பொலீசாரும் உளவுப் படையினரும் பிரபாகரனை வேட்டையாட அலைகின்றனர்.
துரையப்பா கொலையின் பின்னதாக காங்கேசந்துறையில் தான் தம்பி பிரபாகரன் தலைமறைவாக வாழ்கிறார். ஏனையோரின் கைதுக்குப் பின்னர் அவர் அங்கு வாழ முடியாத நிலை. அவரது ஊரான வல்வெட்டித்துறையோ வடமராட்சியோ அவர் கால்வைப்பதற்குக் கூட நினைத்துப் பார்க்கமுடியாத நிலையிலிருந்தது. போலிசார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தினூடே பயணம் செய்வதென்பதே முடியாத காரியமாக இருந்தது. இந்த நிலையில் தான் செட்டியிடம் முன்னர் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எமது ஊரான புன்னாலைக்கட்டுவனை நோக்கி வருகிறார்.
அவ்வாறு அவர் வரும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசு கூட செலவுக்கில்லை. அன்று அவர் உணவருந்தியிருப்பார் என்பது கூடச் சந்தேகமே. அவருடைய சிறிய தொடர்பாளர்கள் கூடக் கைது செய்யப்பட்டுவிட்டனர். எந்த அடிப்படை வசதியுமின்றி அனாதரவான நிலையிலேயே நாம் அவரைச் சந்திக்கிறோம்.
எம்மிடம் வந்த பிற்பாடு முன்னைய தொடர்புகளைச் சிறிது சிறிதாக ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.
எமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் மட்டும் தான். அவர்கள் அனைவருமே கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் கோவிலில் பூசை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேரப் போராளியாகத் தீர்மானித்திருந்தேன். பின்னர் எமது நடவடிக்கைகளுக்குத் தேவைபடும் பணத்தைச் சேகரித்துக் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்வதற்காக நான் எனது பிராமணத் தொழிலைத் தொடர்வதாகத் தீர்மானித்தேன்.
இதற்கு மேலாக எனது வீட்டிலிருந்த நகைகளை அடகு பிடித்தே போராளிகளின் போக்குவரத்துச் செலவு, புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் பணம் போன்ற செலவுகளைச் சமாளித்துக் கொண்டோம். இதே போல, துரையப்பா கொலையின் திட்டமிடலை மேற்கொள்வதற்காக பற்குணம் தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்தே பணம் திரட்டிக்கொண்டார். சில வேளைகளில் பிரபாகரன் ஒரு வேளை மட்டுமே ஏதாவது உணவருந்தித் தான் வாழ வேண்டிய நிலை இருந்தது. எனது வரலாற்றுப் பதிவில் வருகிற இன்னொரு அத்தியாயத்திலும் பிரபாகரன் தனிமைப்பட்டுப் போகிற இன்னொரு சந்தர்ப்பமும் பதியவுள்ளேன்.
இந்த எல்லா இக்கட்டான சூழலிலும் பிரபாகரனின் உறுதி குலையாத மனோதிடம்
கண்டு நான் வியப்படந்திருக்கிறேன்.பலர் அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது எனலாம். பிரபாகரனும் நானும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. பிரபாகரன் பழகுவதற்கு இயல்பானவர். ஒரு குறித்த இயல்பான தலைமை ஆளுமை கூட இருந்ததை மறுக்க முடியாது.
என்னை பொறுத்த வரை ஆரம்பத்தில் எம்மோடு இணைந்த பலர் மிகத் தவறான சொந்த நலனை முதன்மைப் படுத்தியவர்களாகவே காணப்பட்டனர். புத்தூர் கொள்ளைப் பணத்தில் ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தாம் முழு நேரமாக இயங்குவதானால் தமது குடும்பதைப் பராமரிக்க இந்தப் பணத்தை அவர்கள் கோரினர். இவர்களில் ராஜ் என்னசெய்கிறார் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயவேல் மரணமடைந்திருக்க வேண்டும்.
20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.
இவ்வாறு பெரும் மன உழைச்சல், அர்ப்பணம், தியாகம் என்பவற்றினூடாக ஐந்து பேர் கொண்ட மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகளின் மத்திய குழுவாக உருவாகிறது. புத்தூர் வங்கிப்பணத்தை வைத்துக்கொண்டே பயிற்சி முகாமைப் புளியங்குழத்தில் உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு உருவான பயிற்சி முகாமைத் தவிர ஒரு பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கிறோம். புதிதாக போராளிகளை உள்வாங்கி வடிகட்டி அதன் பின்னர் பயிற்சி முகாமிற்கு அனுப்பும் நோக்கத்துடனேயே இந்தப் பண்ணை
உருவாக்கப்படுகிறது. இந்தப் பண்ணை வவுனியாப் பூந்தோட்டத்தில் உருவாகிறது. விவசாய நிலம் ஒன்றிலேயே இதை அமைத்துக் கொள்கிறோம். அந்த நிலம் காங்கேசந்துறை தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் சொந்தமானது.
காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. இதே ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தான் புத்தூர் வங்கிக் கொள்ளை நடந்தது. சில மாதங்களின் உள்ளாகவே பண்ணையையும், பயிற்சி முகாமையும் உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வேளையில் தம்பி பிரபாகரனும் நானும் மட்டுமே முழு நேரச் செயற்பாட்டாளர்களாக இருந்தோம்.
இந்தப் பண்ணைக்கு உள்வாங்கும் நோக்குடன் பத்துப் பேர் வரை பேசியிருந்தோம். அவர்கள் அனைவருமே அங்கு வருவதாக உறுதியளித்திருந்தனர். அவர்களுள் புத்தூர் கொள்ளைப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோரும் அடங்குவர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு அவர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களுக்காக நான் புகையிரத நிலையத்தில் காத்திருந்தேன்.
இதில் ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் பத்துப் பேரில் ஒரே ஒருவர் மட்டுமே அங்கு வந்து சேர்ந்தார் என்பது மட்டுமே. கற்பனைகளோடு காத்திருந்த எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அங்கு வந்து சேர்ந்தவர் ஞானம் என்ற சித்தப்பா மட்டுமே. இவ்வேளையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரபாகரன் பண்ணைக்கு வரவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஆக, நானும், சித்தப்பாவும் பண்ணையில் தனித்துப் போனோம். எம்மிடம் பணம் வாங்கிக் கொண்ட இரண்டு பேரும் கூட அங்கு வரவில்லை என்பது விபரிக்க முடியாத விரக்திமனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது.
இதற்கு மறு நாள் நாம் எதிர்பார்க்காமலே இன்னொருவர் வருகிறார். அவர் பெயர் நிர்மலன். அவரைக் கறுப்பி என்றும் அழைப்போம்.
இவ்வேளையில் எமக்கு எந்த வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. மத்திய குழுவிலிருந்த எம்மைத் தவிர, ராகவன் மற்றும் குலம் ஆகியோரே எம்முடன் இருந்தனர். அதிலும் ராகவன் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டு ஆதரவு மட்டத்திலேயெ இருக்கின்றார். குலம் தனது குடும்பச் சுமைகள் காரணமாக முழு நேரமாகச் செயற்பட முடியாத நிலையில் ஆதரவு மட்ட வேலைகளேயே செய்து வந்தார்.
இப்போது பண்ணை ஆரம்பமாகிவிட நான், நிர்மலன், சித்தப்பா பின்னதாக இணைந்து கொண்ட பற்குணா ஆகியோரே பணியாற்றுகிறோம். இங்கு விவசாயத்தையும் ஆரம்பித்துவிட்டோம்.
இதெ வேளை உரும்பிராயைச் சேர்ந்த தமிழர்சுக் கட்சி முக்கியஸ்தரான சேகரம் என்று அழைக்கப்படும் சந்திர சேகரம் என்பவர் எம்மில் சிலரைச் சந்தித்துக்கொள்வார். அவரின் ஊடாக மட்டக்களப்பைச் சார்ந்த மைக்கல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைக்கிறது.
மைக்கல் மட்டக்களப்பில் ஈடுபட்ட அரச எதிர்ப்புப் போராட்டங்களால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தவராவர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு வந்து உரும்பிராயில் சந்திரசேகரத்தைச் சந்திக்கிறார். சந்திரசேகரம் அவரை எமக்கு அறிமுகப்படுத்த, அவருடனான உறவை நாம் வளர்த்துக் கொள்கிறோம். துடிப்பான கிழக்கு மாகண இளைஞனின் தொடர்பு எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. இந்த உற்சாகத்தின் வேகத்தில் அவரை உடனடியான செயற்திட்டத்திற்குள் உள்வாங்குவதாகத் தீர்மானிக்கிறோம்.
துணிவும், செயற்திறனும் கொண்டவராதலாலும், ஏற்கனவே வன்முறைப் போராட்டங்களில் அனுபவமுள்ளவர் என்பதாலும், எமது புளியங்குளம் பயிற்சி
class="alignleft size-thumbnail wp-image-9149" title=rajan v:shapes="_x0000_i1033">
முகாமிற்கு அவரைக் கூட்டிச் செல்கிறோம். அங்கே சில நாட்கள் மைக்கல் எம்முடன் தங்கியிருந்தார். அதன் பேறாக ராஜன் செல்வநாயகத்தைம் என்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்காக அவரை ஏற்படு செய்கிறோம்.
அதன் முதற்படியாக அவரிடம் பணம் கொடுத்து ராஜன் செல்வநாயகத்தின் நடமாட்டத்தை உளவறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை அனுப்பி வைக்கிறோம். எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மைக்கல் பின்னதாக பல நாட்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.
அவர் மட்டக்களப்பு சென்று தனது வேலைகளை முடித்துத் திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நாட்கள் கடந்தன மைக்கல் வரவில்லை. அவ்வேளையில் சேகரத்தைச் சந்தித்த போது, அவர் மைக்கல் இன்னமும் யாழ்ப்பணத்தில் தான் தங்கியிருப்பதாக அறியத் தந்தார். அத்தோடு எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து அவர் பகிரங்கமாக பல இடங்களுக்குப் போய் வருவதாகவும். நாம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.
இதை அறிந்து கொண்ட நாம், மைக்கலை பல தடவைகள் எம்மை வந்து சந்திக்குமாறு கோரியும் அவர் எம்மிடம் வரவில்லை.
மைக்கலிற்கு எமது உறுப்பினர்கள் பலரைத் தெரிந்திருந்தது. எமது ரகசிய இடங்களைத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நாம் மேலும் பதட்டமடைந்தோம்.
அப்போது தம்பி பிரபாகரன் என்னிடமும் குமரச்செல்வம் என்பவரிடமும் மைக்கலைக் கூப்ப்ட்டு எச்சரிக்க வேண்டும் என்றும் எல்லை மீறினால் கொலை செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதை அவர் மத்திய குழுவிலிருந்த ஏனையோருக்குச் சொல்லவில்லை. எம்மிருவருக்கு மட்டுமே அதைத் தெரிவிக்கிறார். நாங்கள் இது குறித்து எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு மத்திய குழுவிலிருந்த பட்டண்ணாவும் சின்னராசும் பயப்படுவார்கள்; அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். அதாவது மைக்கலைக் கொலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுமானால் அதற்கு இவ்விருவரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இவ்விவகாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்ட்டம் என்கிறார் தம்பி பிரபாகரன்.
அந்த வேளையில் பிரபாகரன் சொல்வது எமக்கு நியாயமாகப் பட்டது இதனால், நாம் இந்தச் செயலுக்குச் சம்மதம் தெரிவித்தோம்.

தொடர்ச்சியான எமது வற்புறுத்தலின் பேரில் மைக்கல் புளியங்குளத்திற்கு எம்மிடம் பேசுவதற்காக வருகிறார். யானைகளும், விசப் பாம்புகளும் நடமாடும் இருண்ட காட்டினுள் மயான அமைதி நிலவுகிறது. தீயின் கோரம் நிலவின்
class="alignleft size-thumbnail wp-image-9150" title=camp v:shapes="_x0000_i1034">
ஒளியை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மைக்கலுடன் உரையாடுகிறோம். பின்னர், நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம்

70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)
நடந்தவை எல்லாமே ஒரு கனவு போல் இன்றும் மறுபடி மறுபடி எனது நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. வன்னி குறு நிலப்பரப்பில் ஆயரமாயிரமாய் மக்கள் பலியெடுக்கப்பட்ட போதெல்லாம், செய்வதறியாது திகைத்துப் போனவர்களுள், உணர்வின்றி, உணவின்றி உறக்கம் தொலைத்து அதிர்ச்சியடைந்த ஆயியமாயிரம் மனிதர்களுள் நானும் இன்னொருவன்.
தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன் முதலில் உருவாக்கிக் கொண்ட்ட அமைப்பின் மத்திய குழுவில் நானும் ஒருவன் என்ற வகையில் இழப்புக்கள் எல்லாம் இன்னும் இறுக்கமாய் எனது இதயத்தை அறைந்தது. 1970 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சுதந்திரக்கட்சியின் தலைமியிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வருகிறது. என்.எம்.பெரேரா என்ற ரொஸ்கிய வாத இடதுசாரி நிதியமைச்சராக நியமிக்கப்படுகிறார்.


தமிழகத்திலிருந்து வருகின்ற பெரியாரின் எழுத்துக்களைப் படித்ததில் எனக்கு நாத்திகவாததில் நாட்டம் ஏற்படுகிறது. பிராமணக் குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது சுற்றத்திலிருந்து எதிர்ப்புக்கள் வருகின்றன.
எனது இருபதுகளில் ஏற்படுகின்ற இளைஞனுக்கே உரித்தான நாட்டங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு புரட்சி போராட்டம் என்பன குறித்துச் சிந்திக்கிறோம். இடது சாரியம் குறித்தும் மார்க்சியம் குறித்தும் அறிந்திராத நாம் தமிழ்ப் பேசும் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.
இந்த நிலையில் 1970 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, சிறீ லன்கா சுதந்திரக் கட்சி ஆகின இணைந்து இலங்கையில் ஒர் அரசை அமைத்துக் கொள்கின்றன. 1972 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியை கட்டுப்படுத்தும் வகையில் இனவாரியான தரப்படுத்தல் சட்டமூலத்திற்கான மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுகிறது. இது 1973 இல் அமுலுக்கு வருகிறது. இதே வேளை 1971 இல் பௌத்த மதம் தேசிய மதமாகப் பிரகடனப் படுத்தப்படுகிறது. இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசாகவும் பிரகடனப்படுத்தப் படுகிறது. இந்தக் குடியரசில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவிலை என்பது தவிர இனவாரியான தரப்படுத்தல் என்பது திறமையுள்ள தமிழ் மாணவர்கள் கூட ப்ல்கலைக் கழகக் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கின்றது. இதற்கு முன்னதாக 1958 இல் தமிழ் பேசும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களின் வடு இன்னமும் ஆறியிருக்கவில்லை.
இதனால் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் மாணர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கின்றனர். சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோர் முன்னின்று உருவாக்கிய இந்த அமைப்பில் நானும் எனது ஊரைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். பல ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம். இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசு நாடாகிய போது நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டங்களில் நானும் குலம் என்ற எனது நண்படும் தீவிரமாகப் பங்கெடுக்கிறோம். பெரும்பாலான இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழரசுக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சத்தியாக்கிரகப் போராட்டங்கள், ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள் எனப் பல போராட்டங்களில் தீவிர பங்காற்றுகிறோம். இவ்வேளையில் தமிழரசுக் கட்சிக்கும் மாணவர் பேரவைக்கும் அடிப்படையிலிருந்த முரண்பாடென்பது, செயற்பாட்டுத்தளத்திலேயே அமைந்திருந்தது, மாணவர் பேரவை கூட்டணியின் செயற்பாடு தீவிரமற்றதாக இருந்ததாகக் குற்றம் கூறினர்.
இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துக்களுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணதுரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை.
குடியரசு தின எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகளை ஒட்டி சுமார் 42 பேர் சிறைப்படுத்தப்படுகின்றனர். சேனாதிராஜா, காசியானந்தன் வண்ணையானந்தன் உள்பட பலர் இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்படுகின்றனர். அத்ற்கு முன்னதாக அரச சார்பானவர்களின் வீடுகள் முன்னால் குண்டெறிதல், பஸ் எரிப்பு, அரச வாகன எரிப்பு போன்ற சிறிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இது தவிர குடியரசு தினத்தன்று தொடர்ச்சியாக மக்கள் ஆதரவுடனான ஹர்த்தால் கடையடைப்பு என்பன தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது.
இதே வேளை சிவகுமாரன் சோமவீர சந்திரசிறீ என்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை அவரின் தீவிர தமிழ் விரோத நடவடிக்கைகளுக்காக கொலை செய்வதற்கு பல தடவை முயற்சிக்கிறார். தவிர யாழ்ப்பாண முதல்வராக இருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரான துரையப்பாவைக் கொலைசெய்ய இரண்டு மூன்று தடைவைகள் முயற்சிசெய்கிறார். இவையெல்லாம் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இவேளையிலெல்லாம் நான் ஒரு ஆதரவாளர் மட்டத்திலான செயற்பாடுகளையே மேற்கொண்டேன்.
அதே வேளை வட்டுக்கோட்டை எம்.பீ ஆகவிருந்த அரச ஆதரவாளரான தியாகராஜா என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த ஜீவராஜா என்பவர் தீவிரமாகத் தேடப்படுகிறார். அவர் எமது ஊரான புன்னாலைக் கட்டுவனுக்குத் தலைமறைவாகும் நோக்கத்தோடு வருகிறார். அப்போது நானும் குலம் என்பவரும் அவருக்கு பாதுகாப்பு ஏற்படுகளைச் மேற்கொண்டு தலைமறைவாக வாழ்வதற்கு உதவிபுரிகின்றோம். கிராமத்திற்குக் கிராமம் பொலிசாரும், உளவாளிகளும் தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடித்திரிந்த அந்தக் காலகடம் எதிர்ப்புணர்வும், வீரமும் நிறைந்த உற்சாகமான வாழ்க்கைப்பகுதி. அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா, பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக் கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்.
இந்தக் கொள்ளையின் போது பொலீசாருடன் ஏற்பட்ட போராட்டத்தில் சிவகுமாரன் சயனைட் வில்லைகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்கிறார். ஜீவராஜா கைது செய்யப்படுகிறார். பிரான்சிஸ் தப்பிவந்து விடுகிறார்.
இதே வேளை செட்டி, பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிவருகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கை அரச அமைச்சர்களை வரவேற்று அழைத்து வந்த அருளம்பலம் என்பவரின் ஆதரவாளரான குமாரகுலசிங்கம் என்பவரைக் கொலைசெய்ததன் அடிப்படையிலேயே செட்டி உட்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டனர். செட்டியை பொறுத்தவரை எதிர்ப்புப் போராட்ட, வன்முறைப் போராட்ட உணர்வுகளுக்கு அப்பால் தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபாடுள்ளவராகவே காணப்பட்டார். பல தனிப்பட்ட திருட்டுக் குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டவர். அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அவர் சிறுவயதாக இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர். அரசிய தொடர்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.
செட்டியைப் பற்றை எமக்கு அப்போது பெருதாகத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அவர் எம்மைப் பற்றி அறிந்து கொண்டு எமது ஊருக்கு எம்மைத் தேடி வருகிறார். எமது ஆதரவைக் கோருகிறார். அப்போது செட்டியும் ரத்னகுமாரும் அங்கு வருகின்றனர்.
அங்கு வந்தவர்கள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் துப்பாக்கி தேவை என்றும் அது சாத்தியமாவதற்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறுகின்றனர். செட்டி அந்த நோக்கத்திற்காக தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய்களைக் கொள்ளையிடுகிறார். அந்தக் கொள்ளைப் பணத்துடன் படகு மூலமாக அவர் இந்தியாவிற்குச் செல்கிறார்.
இதே வேளை பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறை இந்திய இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபாரத்தின் பிரதான மையமாக இருந்தது. இதன் காரணமாகவும் தமிழரசுக் கட்சி மற்றும் சுயாட்சிக் கழக நவரத்தினம் போன்றோரின் செல்வாக்குக் காரணமாகவும் இயல்பாகவே இப்பிரதேசம் அரச எதிர்ப்புணர்வுடையதாக அமைந்திருந்தது. இங்கு கடத்ததல் தொழிலில் முன்னணியிலிருந்த தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மாணவர் பேரவையின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டனர். இவர்கள் கடத்தலை முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்தாலும், அரசிற்கு எதிரான அரசியற் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தனர்.
சிறுவனாக இருந்த பிரபாகரன் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு அரச பேரூர்ந்து ஒன்றை எரிப்பதற்கு முயற்சித்துத் தப்பித்ததால் அவரும் தேடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது தான் நிரம்பியிருக்கும். பிரபாகரன் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லையாயினும் அரச எதிர்ப்பு விவகாரங்களில் குட்டிமணி, தங்கத்துரையுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்கிறார்.
குறிப்பாக தமிழ் நாட்டிற்கான போக்குவரத்து வசதிகளுக்காக பிரபாகரன் மட்டுமல்ல அனைத்து அரச எதிர்ப்பாளர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரைச் சார்ந்திருக்கவேண்டிய நிலையே ஏற்பட்டது.
தேடப்படும் நிலையில் குட்டிமணியைச் சந்தித்து அவருடன் பிரபாகரன் தமிழ் நாட்டிற்குத் தப்பிவருகிறார். இதேவேளை எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார். அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்.
பிரபாகரனைப் பொறுத்தவரை முழுநேரமாக அரச எதிர்ப்பு வன்முறை அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை குட்டிமணி, தங்கத்துரையிடம் முன்வைக்க அவர்கள் கடத்தல் தொழிலைத் தொடர்ந்தவண்ணமிருந்தனர். இவ்வேளையில் செட்டியும் ஆயுதம் வாங்கி இலங்கை அரசிற்கு எதிரானதாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். அவ்வேளையில் தான் பிரபாகரன் செட்டியுடன் இணைந்து செயற்படும் முடிபிற்கு வருகிறார். சுமார் பதினெட்டுவயதாகும் போது தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரன் இம்முடிபை எடுக்கிறார்.
அவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஜனார்தனனின் தொடர்பு பிரபாகரனிற்கு ஏற்படுகிறது.
இதே வேளை தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம் என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப் போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர். அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப் போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்து தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன் இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார்.
இதன் பின்னர் பிரபாகரன் இலங்கைக்கு செட்டியுடன் திரும்பவந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானிக்கிறார். இதனை தங்கத்துரை குட்டிமணியிடம் கூறியபோது, அவர்கள் செட்டி கொள்ளைக்காரன், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அவருடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், பிரபாகரனோ அவர்கள் தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்று கூறி செட்டியுடன் நாடு திரும்புகிறார். இலங்கைக்கு வந்த பிரபாகரன் சிலரைச் சேர்த்துக்கொண்டு யாழ்ப்பாண மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறார்.
அவ்வேளையில் தான் இன்பம், செல்வம் பொன்ற சில இளஞர்களைப் பிரபாகரன் இணைத்துக்கொள்கிறார். இன்பம் செல்வம் இருவரும் பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள்.
இவ்வாறு பிரபாகரன் துரையப்பாவை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, செட்டி பொலீசாரால் கைது செய்யப்படுகிறார். அவர் வைத்திருந்த கொள்ளைப் பணத்தில் கார் ஒன்றை வாங்கி தனது ஊரினுள்ளேயே உலாவித் திரிந்ததால் பொலீசாரின் கண்ணுக்குள் அகப்பட்டு விடுகிறார், இதனாலேயே கைதும் செய்யப்படுகிறார்.
இதன் பின்னர் பிரபாகரன் தனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு துரையப்பாவைக் கொலைசெய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதில் ஈடுபட்டவர்கள், பிரபாகரன், கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற நால்வருமே. அவ்வேளையில் தமிழரசுக்கட்சியின் உணர்ச்சிகரப் பேச்சுகளால் உந்தப்பட்டுப் பல இளைஞர்கள் துரையப்பாவைக் கொலைசெய்ய வேண்டும் என்ற முடிபிற்கு வந்திருந்தனர். துரையப்பாவைப் பொறுத்தவரை உரிமைகளை விட அபிவிருத்தியே முதன்மையானது என்ற கருத்தைக் கொண்டிருந்தவர். இதனால் இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டுகொண்டதில்லை. இன்றைய டக்ளஸ் தேவானந்தாவின் அதேவகையான நிலைப்பாட்டை அன்றே கொண்டிருந்தவர். இந்த அடிப்படையில் பொலீசாரின் அடக்குமுறைகளுக்கும் துணைபோனவர். பல்வேறுபட்ட இளைஞர்கள் இந்த முயற்சியில் தன்னிச்சையாக ஈடுபடலாயினர். இப்போதெல்லாம் இக்கொலைகளை நாம் நியாயப் படுத்துவதென்பது ஆயுதக் கலாச்சரத்தை அறிமுகப்படுத்துவதாகவே அமையும் ஆனால் அன்றோ நிலைமை மாறுபட்டதாக இருந்தது. சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த, மிகுந்த பாதுகாப்புடன் வாழ்ந்த துரையப்பாவைக் கொலைசெய்தல் என்பது ஒரு சமூக அங்கீகாரமாகவே கருதப்பட்டது.
பல இளைஞர்கள் இந்த முயற்சியில் குழுக்களாகவும் தனியாகவும் ஈடுபட்டிருந்த போதும் கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் இவர்கள் நால்வரும் தான். இவர்கள் நால்வருமே 20 இற்கு உட்பட்ட வயதுடையவர்களாகவே இருந்தனர்.
ஆனால் இக்கொலையை நிறைவேற்றியவர்கள் யார் என்பது வெளியுலகிற்கும் பொலீசாருக்கும் தெரியாத இரகசியமாகவே இருந்தது. பின்னதாக கலாபதியையும் கிருபாகரனையும் பொலீசார் கைதுசெய்துவிட்டனர். இவ்வேளையில் பிரபாகரன் தனது வீட்டில் தங்கியிராததால் தப்பிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். இவ்வேளையிலேயே இதில் தொடர்பற்ற பலர் கைது செய்யப்படுகின்றனர், குறிப்பாக சந்ததியார் போன்ற இளைஞர் பேரவை முக்கியஸ்தர்களும் கைதுசெய்யப்படுகின்றனர்.
இந்த வேளையில் பிரபாகரனுடன் சார்ந்த அனைவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பழைய தொடர்புகள் அனைத்தையும் இழந்த தேடப்படும் நபராகவே காணப்படுகிறார்.
இவ்வேளையில் தான் எம்மைப்பற்றி அறிந்து கொண்ட பிரபாகரன் எம்மைத் தேடி எமது ஊருக்கு வருகிறார். முதலில் எமது ஊரைச் சேர்ந்த ராகவனைச் சந்திக்கிறார். அவரின் ஊடாக என்னையும் குலம் என்பவரையும் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். செட்டி தான் எமது தொடர்புகள் குறித்துத் தெரியப்படுத்தியதாகவும் கூறுகிறார். இவ்வேளையில் செட்டி தொடர்பாக நாம் முழுமையாக அறிந்திருந்தோம். இதனால் செட்டியின் தொடர்பாளராகப் பிரபாகரன் அறிமுகமானதால் நாம் அவரைது தொடர்புகளை நிராகரித்திருந்தோம்.
அந்த வேளையில் பிரபாகரனுக்கு உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியுமற்ற நிலையிலேயே காணப்பட்டார். சில நாட்களின் பின்னர் மறுபடி ராகவனுடன் வந்த பிரபாகரன், எம்முடன் பேசவிரும்புவதாகத் தெரிவித்தார்.
அப்போது தான் முதன் முதலாகப் பிரபாகரனைச் சந்திக்கிறேன். இங்கிருந்துதான் பிரபாகரனுடனான வரலாறு ஆரம்பமாகிறது.
பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில பலவீனங்கள் இருந்தாலும் அவர் துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத் தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். நாமும் அவருடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறோம். துரையப்பா கொலையில் தொடர்புடைய நால்வரில் கலாவதியும் கிருபாகரனும் கைதுசெய்யப்பட பற்குணம் என்பவர் தமிழ் நாட்டிற்குத் தப்பிச்சென்று விடுகிறார். பிரபாகரன் மட்டுமே இலங்கையில் இருக்கிறார்.
அவ்வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் இந்தியாவிலிருந்து மயிலிட்டி என்ற இடத்திற்கு வருகிறார். இவரும் தேடப்படுபவராக இருந்ததால் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தார்.
அவ்வேளையில் இளைஞர் பேரவையில் ஆதரவளாரான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் குமரகுரு என்பவர் பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால் காண்டீபன் இலங்கைக்கு வந்ததும், பிரபாகரனை இந்தியவிற்கு அனுப்புவதற்குப் பதிலாக காண்டீபனை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கிறார். கொலையில் நேரடியாக ஈடுபட்ட தன்னை அனுப்பாமல் காண்டீபனை அனுப்பிய இந்த நடவடிக்கை காரணமாக பிரபாகரன் கூட்டணியினர் மீது வெறுப்படைந்து மறுபடி எம்மிடம் வருகிறார். அதன் பின்னர் தான் இந்தியாவிற்கு இனித் தலைமறைவாகப் போவதில்லை என முடிபிற்கு வந்து எம்முடன் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், நான், குலம், ராகவன், அனைவரும் இணைந்து சிலரது ஆதரவுடன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறோம். பிரபாகரன், செட்டியின் உறவினரான செல்லக்கிளி, குமரச்செல்வம் ஆகியோர் நேரடியாக வங்கிக்குள் சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
அப்போது கிடைத்த பணம் எனது பொறுப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது. அதில் ஈடுபட்ட இருவர் தமக்குக் குடும்பச் சுமை இருப்பதாகவும் தமக்கு பண உதவி செய்தாலே முழு நேரமாக இயங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டன. அவ்வேளையில் நான், ராகவன் தவிர்ந்த ஏனையோருக்கு கடவுள் பற்று இருந்தது. குறிப்பாகப் பிரபாகரன் மிகுந்த கடவுள் பக்தி உடையவராகவும், சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்டார். இதனால் பிரபாகரனின் முன்மொழிவின் பேரில் செல்லச் சன்னதி கோவிலில், வங்கிக்கொள்ளைப் பணத்தில் ஒரு அன்னதானம் வழங்கப்பட்டது. என் போன்றவர்களுக்கு மார்க்சிய தத்துவங்கள் குறித்துத் தெரிந்திராவிட்டாலும், கடவுள் மறுப்பு என்பது பெரியாரியக் கொள்கைகளூடான தாக்கத்தினால் ஏற்பட்டிருந்தது. இதனால் இந்தச் செல்லச்சனதிக் கோவில் நிகழ்வை முற்றாக மறுத்திருந்தேன். குலம், நான் , ராகவன் மூவரும் தான் இதை முழுமையாக எதிர்த்தோம்.
வேடிக்கை என்னவென்றால் இவ்வேளையிலும் கூட நான் தொழில் ரீதியாக கோவிலில் பிராமணராக இருந்தேன் என்பதுதான்.
எது எவ்வாறாயினும் பிரபாகரன் அப்போது எமக்கெல்லாம் ஒரு ஹீரோ போலத்தான். துரையப்பா கொலையை வெற்றிகரமாக முடித்தவர் என்பது தான் இதன் அடிப்படைக் காரணம்.
ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடவில்லை. இது கூட ஒரு கடவுள் மறுப்பின் காரணமாகத் தான். வங்கிக் கொள்ளைக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளை வாங்குவதற்காக பிரபாகரன் ராகவனை வேறொரு இடத்திற்கு அனுப்பிவைக்கிறார்.அவ்வேளையில் அங்கு கோவில் திருவிழா நடை பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் ராகவன் கடவுள் இல்லை என்று சொல்வதால் அவரைத் தீக்குளித்துக் காட்டுமாறு கேட்டிருக்கிறார். அவ்வாறு நடந்த வாக்குவாததிலெல்லாம் ஈடுபட்டதால் பிரபாகரன் ஆத்திரமடைந்திருக்கிறார். போன வேலையில் ஈடுபடாமல் வேறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ராகவனை சில காலம் நீக்கி வைத்திருந்தார். இதனாலேதான் ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் கூடப் பங்குபற்றவில்லை. ஒரு சில நாட்களுக்கே விலகியிருந்த ராகவன் மீண்டும் இணைந்து கொள்கிறார்.
இதன் பின்னர் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிபிற்கு வருகிறோம். புளியங்குளம் காட்டில் ஒரு இடத்தையும் தேர்ந்து கொள்கிறோம். அங்குதான் எமது பயிற்சிகளை ஆரம்பிக்கிறோம். இந்த முகாமில் முழு நேரமாக பங்கெடுத்துக் கொண்டவர்கள் நானும் பிரபாகரனும் மட்டும்தான். மற்றவர்கள் பகுதி நேரமாக அங்கு பயிற்சிக்கு வந்து போவார்கள்.
அவ்வேளையில் எமது குழுவிற்கான மத்திய நிர்வகக் குழு ஒன்றை அமைத்துக் கொள்கிறோம். அக்குழுவில் நான், பிரபாகரன், குமரச்செல்வம், பட்டண்ணா, சின்னராசு என்கிற உதய குமார் என்ற ஐந்து பேரும் அங்கம் வகிக்கிறோம். அப்போது பருமட்டான திட்டம் ஒன்றினை முன்வைக்கிறோம்.
1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.
2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.
3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.
4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
இவையெல்லாம் அன்று எமக்கு நியாயமான சுலோகங்களாகத் தான் தெரிந்தன. இவற்றின் அடிப்படைகளே இன்று ஆயிரமாயிரம் உட்கொலைகளை உருவாக்கி ஈழப்போராட்டத்தில் இரத்தம் உறைந்த வரலாற்றை உருவாக்கும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பிரசுரங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவை அனைத்தும் எதாவது ஒரு அரசியல் பின்புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன. நான் சொல்லப் போவதெல்லாம் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புக்களும் போராட்டங்களும் கூட இன்னொரு கோர வரலாற்ரைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும் உண்மைச் சம்பங்களை முன்வைத்து எழுத்துருவாக்குவதை இன்றைய கடமையாக எண்ணுகிறேன். என்னோடு பங்களித்த ராகவன், குலம், கிருபாகரன்,கலாபதி உள்ளிட்ட அனைவரும் இது முழுமை பெறத் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

E-mailPrintPDF
எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)
பெருப்பிக்கசிறுப்பிக்க
நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம். மைக்கல் தான் பேசுவது எதையுமே கேட்கிறாரில்லை. அவர் இயக்கத்தை விட்டு வெளியே போகப்போவதாகச் அடம்பிடித்தார் அதனால் நான் சுட்டுக் கொன்றுவிட்டேன் என்கிறார்.
ஆம், அது நடந்துவிட்டது மட்டக்களப்பில் தமிழுணர்வுப் போராட்டங்களை நடத்திய மைக்கல் இப்போது எம் மத்தியில் இல்லை. வெறுமனே தூய இராணுவக் குழு ஒன்றையும் அதற்கான ஒழுங் முறைகளையும் உருவமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவற்றையெல்லாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கு எமக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள் அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறித்தும் தான் நாம் பின்னர் கேள்வியுற்றோம்.
இதற்கு மாறாக, இராணுவ அமைப்பைக் உருவாக்கிக் கொள்வதைப் பற்றிச் சிந்தித்த எமக்கு, நாமும் எமது போராளிகளும் மட்டுமே மக்கள்.அதிலிருந்து வெளியிலிருப்போரோ, விலகிச்செல்வோரோ, யாராகவும் இருக்கலாம்; எதிரியாகவோ, எதிரியின் நண்பனாகவோ, துரோகியாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு தலைகீழாக ஆரம்பித்த எமது அரசியலை வழி நடத்தவோ, எம்மோடு விவாதிக்கவோ, அரசியல் குறித்துப் பேசவோ யாரும் இல்லை.
இதனால் இந்தக் கொலையெல்லாம் எமக்கு நியாயமாகத் தான் தெரிந்தன. எமது இரகசியங்களைத் தெரிந்து வைத்திருந்த மைக்கல் வழியாக இவையெல்லாம் வெளியே செல்லுமானால், நாம், நமது இருப்பிடங்கள் காட்டிக்கொடுக்கப்படும். நாம் கனவுகண்ட தமிழ் ஈழம் சிதைக்கப்படும். இவ்வாறு தான் நானும் பிரபாகரனும்  ஏனையோரும் சிந்தித்திருந்தோம்.
என்ன செய்வது எமது ஆரம்ப அரசியல் தவறுகள் கொலைகளை அங்கீகரிக்கும் வரை எம்மை நகர்த்தி வந்திருக்கிறது என்பதை பிற்காலங்களில் சுயவிமரசன அடிப்படையில் பார்த்திருந்தாலும், அவ்வேளையில் எமக்கு அது நியாயமாகத் தான் தெரிந்தது.
சில நிமிடங்களின் முன்னர் எம்மோடு பேசிக்கொண்டிருந்த மைக்கல் இப்போது எம்மோடு இல்லை. இதயம் கனத்தது. தமிழீழக் கனவுக்காக இதையெல்லாம் தாங்கிக் கொண்டோம். பின்னர் சற்குணம், நான், பிரபாகரன், குமரச்செல்வம் ஆகிய நால்வரும் சேர்ந்து இரவிரவாக மைக்கலின் உடலைக் காட்டினுள் எரிக்கிறோம். கோரம் கவ்விய இரவு! ஓசைபடாத தமிழீழக் கனவு மட்டும் தான் எம்முள் ஒளிர்விட்டுக் கொண்டிருந்தது!!
நாம் உறங்கவில்லை. தம்பியும் குமரச்செல்வமும் புகையிரத்தில் ஏறி யாழ்ப்பாணம் திரும்புகின்றனர். நானும் சற்குணாவும் காட்டினுள் தொடர்ந்து தங்கியிருந்து இறுதியில் எரிந்து முடியும் வரை காத்திருந்துவிட்டு மதியப் புகையிரதத்தில் ஏறுகிறோம். யாழ்பாணம் நோக்கி எமது புகையிரதம் எமது நினைவலைகளோடே நகர்ந்துகொண்டிருந்தது. இந்தச் சம்பவம் எமது நான்குபேரையும் தவிர வேறு எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.
இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது.
அவர்கள், எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் முழு வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாகி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிபிற்கு வருகிறோம்.
இந்த முடிபின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கத்துரை மற்றும் ராசுப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும், நட்புசக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் அப்போது ரெலோ TELO என்ற அமைப்பை உருவாக்கியிருக்காவிட்டாலும், தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்.
பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பிலிருந்த எவருமோ அவரை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம்.தங்கத்துரை குட்டிமணி போன்றோர் பிரதானமாகக் கடத்தல் தொழிலையையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவுமே மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல், நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கினோம்.
இவ்வேளையில் எமக்கு இன்னொரு பிரச்சனை எழுகிறது. மைக்கலைக் கொலைசெய்வதில் பங்காற்றிய குமரச்செல்வம் எம்முடனான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டமை எமக்கு அதிர்ப்தியையும் பய உணர்வையும் ஏற்படுத்துகிறது.
அவரைப் பலதடவை நாம் நேரடியாகவும், மற்றவர்களூடாகவும் அணுகிய வேளைகளிலெல்லாம், சுகவீனம், வேறு வேலைகள் போன்ற காரணங்களைக் கூறியனுப்பினார். சில மாதங்களில் தொடர்புகளை முற்றாகவே துண்டித்துக் கொள்கிறார். இதே வேளை இயக்கத்திற்குரிய இருபதாயிரம் ரூபா வரையிலான பணமும் அவரிடம் இருந்தது. அவற்றை எம்மிடம் ஒப்படைக்கவோ அதற்குரிய செலவீனங்களுக்குரிய காரணங்களை முன்வைக்கவோ அவர் முன்வரவில்லை.
நாம் விசாரித்த வரையில் அவர் மேடை நாடகக் கலைஞனாகவும் இருந்ததால் எமது பணத்தை வைத்து தனது நாடகத் தொழிலில் முதலிட்டு செலவாக்கியிருந்தார் எனத் தெரிந்து கொண்டோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் குலம் கூட மைக்கல் கொலை செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறார். ஆக, நான் மற்றும் குலம் ஆகியோர் மைக்கலைப் போலவே குமரச்செல்வமும் தவறிழைத்திருக்கிறார் அவரும் கூடக் காட்டிக் கொடுப்பாளனாக மாறலாம் என்று பிரபாகரனிடம் சுட்டிக்காட்டுகிறோம்.
மைக்கல் சுடப்பட்டது சரியானால் குமரச்செல்வமும் சுடப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையை முன்வைக்க, பிரபாகரன் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார். குமரச்செல்வம் பிரபாகரனின் நெருங்கிய நண்பரும் ஒரே ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். அவ்வேளைகளில் தனக்குப் பிறகு குமரச் செல்வத்தையே எல்லா விடயங்களிலும் முதன்மைப் படுத்துவார்.
இறுதியில், குமரச்செல்வத்தைப் பேசுவதற்கு அழைத்தால் அவர் வர மறுத்துவிடுவார், தவிர வல்வெட்டித்துறையில் வைத்து பொதுமக்கள் மத்தியில் சுட்டால் ஊரில் பிரச்சனையாகிவிடும் அதனால் வேறு சந்தர்ப்பங்கள் வரும் போது கொலை செய்துவிடலாம் என்கிறார். ஆனால் இறுதிவரை அவர் கொலை செய்யப்படவே இல்லை.
இப்போது மத்திய குழுவில் அவரும் இல்லை. உதயகுமார் தான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் எனக் காரணம் காட்டித் தொடர்புகளைக் குறைத்துக் கொள்கிறார். பின்னதாக முற்றாக தொடர்பற்றுப் போகிறார். சில மாதங்களுக்கு உள்ளாகவே பட்டண்ணாவும் உடல் நிலை குன்றியிருந்த காரணத்தால் தொடர்புகளை நிறுத்திக் கொள்கிறார். இப்போது மத்திய குழுவில் நானும் தம்பி பிரபாகரனும் மட்டுமே எஞ்சியிருந்தோம். ராகவன் போன்றோர் இன்னும் மாணவர்களாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த சூழலில் ஆதர்வாளர் மட்டத்திலேயே தொழிற்பட்டனர்.
எமது ஆரம்ப உறுப்பினர்களின் நிலையற்ற தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தில் தனது குடும்பச் செலவிற்கு என்று ஐந்தாயிரம் ரூபா பெற்றுக்கொண்ட ஜெயவேல் இப்போது நம்மை நோக்கி வருவதே இல்லை. அவர் ஒரு மீன் பிடித் தொழிலாளி தான். எம்மிடம் பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அதை வைத்து ஆடம்பரமாக செலவாடித் திரிவதாக நாம் தகவல் அறிந்திருந்தோம். இவர் பண்ணைக்கு வருவார் என வவுனியா புகையிரத நிலையத்தில் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த சம்பவத்தை முன்னமே கூறியுள்ளேன். இவையெல்லாவற்றையும் பிரபாகரன் மறுபடி நினைவுறுத்தி, அவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறார்.
பிரபாகரன் எம்மிடம் சொல்கிறார்,கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும். அதை நீங்கள் தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.வழமை போலவே எமக்கும் அது நியாயமாகப் படுகிறது. ஆக, கொலை செய்யப்பட வேண்டும் என்ற முடிபுக்கு வருகிறோம்.
ஜெயவேலைக் கொலைசெய்வதற்கான பொறுப்பை சற்குணத்திடமும் என்னிடமும் தம்பி பிரபாகரன் ஒப்படைக்கிறார். ஆரம்பத்தில் நாம் தயங்கினாலும், பின்னர் பிரபாகரனின் தொடச்சியான வற்புறுத்தியதால் இணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். பின்னதாக ஜெயவேலைச் சுட்டுக் கொலை செய்வதைவிட விஷம் கொடுத்துக் கொலைசெய்வதே சிறந்த வழியென்று பிரபாகரன் எமக்கு அறிவுறுத்துகிறார்.
அதற்கான விளக்கத்தை அவரே முன்வைக்கிறார். ஜெயவேல் கராத்தேயில் தேர்ச்சி பெற்றவர். நாங்களோ கொலைக்குப் புதியவர்கள்; அனுபவமற்றவர்கள். ஆக, நாம் கொலைசெய்ய முற்படும் போது அவர் எங்களை மீறி எம்மைத் திருப்பித் தாக்கிவிடுவார் என்பதே பிரபாகரனின் அந்த விளக்கமாக இருந்தது.
இது கூட எமக்கு நியாயமாகத் தான் தெரிகிறது. பின்னதாக ஜெயவேலைப் புளியங்குளத்திற்கு அழைக்கிறோம். கொழுத்தும் வெயிலில், நானும் சற்குணமும், குலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நேரத்தை விரட்டியடித்துக் கொள்கிறோம். நேரம் நகர்கிறது. ஒரு புறத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கம். மறுபுறத்தில் எம்மைத் தடுக்கும் மனிதாபிமானமும் பய உணர்வும். எமது நீண்ட மனப் போராட்டம் மூளையில் உட்கார்ந்து சோகமாய் குடைந்து கொண்டிருக்க ஜெயவேல் வருகிறார். நாம் எதிர்பார்த்திருந்தது போலவே அவர் நேரத்தைத் தவறவிடாமல் அங்கு வந்து சேர்கிறார்.
அன்றெல்லாம் பல்தேசியக் கம்பனிகளின் கோலாவும், பன்டாவுமா இருக்கும்? வெறும் சோடா தான். இலங்கையின் தேசிய உற்பத்தி! நாம் ஒவ்வொரு சோடாவையும் வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்று ஜெயவேல் அருந்துவதற்கானது. அது மட்டுமல்ல அது அவரின் உயிரையும் அருந்தப்போகும் பானம். ஆம் அதற்குள் நஞ்சைக் கலந்திருந்தோம். சில நிமிடங்களில் எமது கண்முன்னேயே ஜெயவேல் மரணிக்கப் போகிறார்.
ஜெயவேல் எம்மோடு உட்கார்ந்து கொண்டு நண்பர்கள் போல உரையாடுகிறோம். சோடாவை அவர் தனது வாய்க்கருகே கொண்டு போகிறார். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். சோடாவைச் சுவைத்த ஜெயவேல் அது கசக்கிறது என்றும் தனக்குக் அருந்த விருப்பமின்றி இருப்பதாகவும் கூறி அங்கேயே வைத்துவிட்டு சில மணி நேரங்களின் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஜெயவேல் இறுதியில் தப்பிவிட்டார். ஒரு கொலை நிகழவில்லை. அவர் நின்று, நேர்கொண்ட பார்வையுடன் எம்மை விட்டு நகர்கிறார்.
இதே காலப் பகுதியில், சில இளைஞர்கள் இணைந்து உரும்பிராய் பெற்றோல் நிலைய நடராஜாவை கொலை செய்கின்றனர். இந்தக் கொலையை மேற்கொண்டவர்கள் உரும்பிராய் பாலா, தங்கா , பேபி சுப்பிரமணியம் ஆகியோர். நான் அறிந்தவரை பேபி சுப்பிரமணியம் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் இதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றே கூறப்பட்டது. தங்கராஜாவும், பாலாவும் இதில் நேரடியாக ஈடுபட்டனர் என்பது உண்மை.
இந்த நடராஜா என்பவரே சிவகுமாரனைக் காட்டிகொடுத்தார் என்பதே அவர் மீதான குற்றசாட்டு. இது தவிர அப்போது ஆட்சியிலிருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் கூட. கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய இந்த மூவரும் தன்னிச்சையாகவே இதை மேற்கொண்டனர். இவர்கள் எந்த நிறுவன மயப்பட்ட அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல எனினும் இவர்கள் மூவருமே தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள்.
உரும்பிராய் பாலா இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விபரம் தெரியவர அவர் தேடப்படுகிறார்.சில மாதங்களின் பின்னர் இவ்வாறு தேடப்படும் சந்தர்ப்பத்திலேயே பாலா, பேபி சுப்பிரமணியம், தங்கா ஆகிய மூவரும் எம்மைப்பற்றி அறிந்து எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தத் தொடர்புகளூடான உரையாடல்களின் பின்னர் அவர்களும் எம்மோடு இணைந்து இயங்க ஆரம்பிக்கின்றனர். இதே வேளையில் லண்டனிலிருந்து இலங்கை வந்திருந்த விச்சேஸ்வரன் என்ற விச்சு என்பவரும் எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்.
இப்போது நாம் இருவரும் தான் எல்லா முடிபுகளையும் மேற்கொள்வோம். மறு புறத்தில் எமது வேலைப் பழு அதிகமாகிக் கொண்டு செல்கிறது. பண்ணைகளை விஸ்தரித்தல், இராணுவப் பயிற்சி, புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல், பணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற பல்வேறு சுமைகள் எமது இருவர் பொறுப்பிலும் வந்து சேர்கிறது.
துரையப்பா கொலைச் சம்பவத்தில் திட்டமிடல் ஒழுங்குபடுத்தல்களுக்கு உதவிசெய்த நாகராஜாவும் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார். பின்னர் அவர் கொழும்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை பார்த்துக் கொண்டே எம்மோடு தொடர்புகளைப் புதுப்பித்து இணைந்து கொள்கிறார். இதே வேளை பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள உதவிய கணேஸ் வாத்தி எம்மோடு தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்கிறார். இறுதியில் இந்த இருவரும் புதிய புலிகளில் இணைந்து கொள்கிறனர். இருப்பினும் இவர்கள் இருவரும் தமது உழைப்பிற்கான தொழிலைக் கைவிட்டாமலே பகுதி நேரமாக எம்மோடு உறுதியாகப் பங்காற்ற முன்வருகின்றனர்.
இரண்டு பேராகச் சுருங்கிப் போன மத்திய குழு தவிர, பண்ணையில்ருந்த உறுப்பினர்கள் முழு நேரமாக பண்ணையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில் புதிய மத்திய குழு ஒன்றைத் தெரிவு செய்யும் முடிபிற்கு வருகிறோம்.
அந்த மத்திய குழுவில், பேபி சுப்பிரமணியம், நாகராஜா, கணேஸ் வாத்தி, தங்கா, விச்சு, நான், பிரபாகரன், , குலம், பின்னதாக இந்தியாவிலிருந்து வந்து திரும்பி வந்த பற்குணம் ஆகியோர் அங்கம் வகிக்கிறோம். இந்த மத்திய குழுவில் தான் புதிய புலிகள்(TNT) என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) என்று உத்தியோக பூர்வமாகபெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 1976 இறுதிப்பகுதிதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பமாகவும் அமைகிறது. இந்த மத்திய குழுத் தெரிவுக் கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பண்ணையில் தான் நடைபெறுகிறது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன்மொழிகிறோம். நானும் கூடத் தான். எமது இயக்கத்தின் புதிய பெயரைத் தெரிவு செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டு விவாதிக்கிறோம். வெவ்வேறு பெயர்கள் சொல்லப்பட்டு இறுதியாக பல்வேறு தெரிவுகளின் கூட்டாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்என்ற பெயர் உருவாகிறது.
மத்திய குழு உறுப்பினர்கள் குறித்த சிறு விபரக் குறிப்பு, இந்தியா சென்றிருந்த பற்குணத்தின் மீழ் வருகை, தமிழீழ விடுத்லைப் புலிகளின் ஆரம்பக் குறிப்புகள், சில தாக்குதல் சம்பங்கள் போன்றன பகுதி நான்கில் வரும்
பின்னூட்டங்களுக்கான குறிப்பு:
தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பகால நிகழ்வுகள் குறித்த இந்தத் தொடரின் பிரதான நோக்கம் இதனை முழுமைப்படுத்தி ஆவண நூலுருவில் வெளிக்கொணருவதே. இதற்கான ஆரம்ப நிலை முயற்சி மட்டுமே இத்தொடர். இதனூடாக பரந்துபட்ட அனுபவத் தளம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதும், நுண்ணிய தகவல்களை உள்வாங்கிக் கொள்வதும் அவற்றினூடாக எனது நூலை முழுமைப்படுத்துவதுமே எனது நோக்கம். ஆக, ஏனைய வாசகர்களும் ஆர்வலர்களும், என்னோடிணைந்திருந்த சமகாலத்தவர்களும், தகவல்களை மேலும் நுண்ணியமானதாக்க அவர்களின் பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
இப்போது எனது குறிப்புகள் அனைத்தும் எனது நினைவுகளின் அடிப்படையிலிருந்தே பதியப்படுகின்றது. போராட்டத்தின் அவலங்களின் நடுவே எனது முன்னைய எழுதப்பட்ட ஆவணம் தொலைந்து போனது துயர் மிக்க சம்பவமாகும்.
நூலுருவில் வெளியிடுவதற்கு முன்பதாக,
1. பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், புகைப்படங்கள் போன்ற ஆவணங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
2.
என்னோடான சமகாலத்தவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தி, திகதி வாரியான தகவல்களைத் திரட்டுகிறேன்.
இந்த முயற்சிகளுக்கு எனது இணையத் தொடர் பங்களிப்பு வழங்கும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
திருநாவுக்கரசு என்பவர் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டிய வாசகருக்கு எனது நன்றிகள். காங்கேசந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நான் குறிப்பிட்ட காலப்பகுதியில் காங்கேசந்துறையில் தேர்தலில் போட்டியிட்டு, பின்னதாகத் தோற்றுப் போனவர்.

தவிர, இன்று ஐரோப்பா சார் புலம் பெயர் இணையத் தளங்களிடையே நிகழும் குழுவாத கோஸ்டிச் சண்டைக்குள் வரலாற்றுப் பதிவுகள் அமிழ்ந்து போகாது, சமூக உணர்வுடன் அனைவரும் பங்களிக்க முன்வருவதனூடாக புதிய சிந்தனை முறையினை வளர்க்கலாம் என்பதே எனது கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக