நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே! வாய்ச் சொல்லில் வீர ரடீ | 1 | |
கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே! நாளில் மறப்பா ரடீ! | 2 | |
சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே அலிகளுக் கின்ப முண்டோ? | 3 | |
கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற பெண்களின் கூட்ட மடி!-கிளியே! பேசிப் பயனென் னடீ! | 4 | |
யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர் மந்திரத் தாலே யெங்கும்-கிளியே! மாங்கனி வீழ்வதுண் டோ? | 5 | |
உப்பென்றும் சீனி என்றும் உள் நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவா ரடீ!-கிளியே! செய் தறியா ரடீ! | 6 | |
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினாற் சொல்வ தல்லால்!-கிளியே நம்புத லற்றா ரடீ! | 7 | |
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலுயி ரைக்-கிளியே பேணி யிரந்தா ரடீ! | 8 | |
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென் றெண்ணிக்!-கிளியே! அஞ்சிக் கிடந்தா ரடீ! | 9 | |
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறும தியும் உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே! ஊமைச் சனங்க ளடீ! | 10 | |
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா மாக்களுக் கோர் கணமும்-கிளியே! வாழத் தகுதி யுண்டோ? | 11 | |
மானம் கிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனர்க் குலகந் தனில்-கிளியே! இருக்க நிலைமை யுண்டோ? | 12 | |
சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல், வந்தே மாதர மென்பார்!-கிளியே! மனதி லதனைக் கொள்ளார் | 13 | |
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமை இருந்த நிலை!-கிளியே! பாமர ரேதறி வார்! | 14 | |
நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத் தேட்டில் விரப்புங் கொண்டே!-கிளியே! சிறுமை யடைவா ரடீ! | 15 | |
சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும், சிந்தை இரங்கா ரடீ-கிளியே! செம்மை மறந்தா ரடீ! | 16 | |
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!-கிளியே! சோம்பிக் கிடப்பா ரடீ! | 17 | |
தாயைக் கொல்லும் பஞ்சத்தைக் தடுக்க முயற்சி யுறார் வாயைத் திறந்து சும்மா!-கிளியே! வந்தே மாதர மென்பார்! | 18 |
<< Previous | Index | >> Next |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக