சனி, 29 ஜனவரி, 2011

நன்றி பதிவு


Jan 28, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளை வான் கடத்தல்கள் அம்பலம்

எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை பின்தொடர்ந்து அவர்களைக் கட்டத்திச் சென்று கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தும் வெள்ளை வான் தொடர்பான அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த வான் டொயோட்டா ரகத்திற்குரிய வெள்ளைநிற வான் எனவும், அதன் முன்புறத்தில் வேறு இலக்கத் தகடும், பின் புறத்தில் மற்றுமொரு இலக்கத் தகடும் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த இலக்கத் தகடுகள் ஒரு கடத்தலுக்குப் பின்னர் மாற்றம் செய்யப்படுகின்றன. வாகனத்திற்கான எரிபொருள் விநியோகம் மற்றும் பராமரிக்கும் பணிகளை பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் நாரேஹன்பிட்டியிலுள்ள வாகனத் திருத்தகம் ஒன்று மேற்கொண்டு வருகிறது. ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்தும் வெள்ளை வானின் கட்டளை அதிகாரியாக காவல்துறைப் பரிசோதகர் பெரேரா என்பவர் பணியாற்றுவதுடன் அவர் உப காவல்துறைப் பரிசோதகராக காவல்துறை சேவையில் இணைந்துகொண்டுள்ளார்.
இதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு காவல்துறையில் நிரந்தர அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அங்குராங்கெத்த, தலவத்துஓயா, கந்தளாய் ஆகிய காவல்துறை நிலையங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மனித கொலைகளுடன் சம்பந்தப்பட்ட அபகீர்த்தியான வரலாற்றைக் கொண்டுள்ள ஒரு நபராவார்.
இவரது தலைமையிலான மூன்று காவல்துறைச் சிப்பாய்கள், ஒரு காவல்துறை சார்ஜன்ட் இணைந்து வெள்ளை வான் கடத்தில் ஈடுபடுவதாகத் தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் கறுப்பு நிற உடையணிந்து வானில் பயணம் செய்து இந்தக் கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மினிசுமி ரக தானியங்கி துப்பாக்கிகள், ப்ரவுனின் ரக கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் அனைத்தும் காவல்துறை சுற்று நிருபங்களை மீறி கொழும்பு மத்தியப் பிரிவிற்குப் பொறுப்பான காவல்துறை மா அதிபர் வழங்கியுள்ளார். இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்து ஆவணங்களில் கூட பதிவுசெய்யப்படவில்லை.
பாதுகாப்பு அமைச்சில் கடமையாற்றிவரும் கேர்ணல் ஒருவரின் ஊடாகவே ஆள்கடத்தல்களுக்கான உத்தரவு காவல்துறைப் பரிசோதகரான பெரேராவிற்கு நேரடியாக வழங்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளரின் பரிந்துரையின் அடிப்படையில் குறித்த கேர்ணல் இந்தப் பதவி உயர்வை அண்மையில் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த ஆட்கடத்தலில் ஈடுபடுத்தப்படும் வெள்ளை வான் புறக்கோட்டையிலுள்ள கொழும்பு மத்தியப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள நலன்புரி கட்டிடமொன்றில் எவருக்கும் தெரியாத வகையில் இரகசியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்திற்கு காவல்துறை அதிகாரிகள் கூட செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் இந்த வான் நள்ளிரவில் ஆட்கடத்தலுக்காக கொண்டு செல்லப்பட்டு அதிகாலையில் மீண்டும் அங்கு கொண்டுசெல்லப்பட்டு நிறுத்திவைக்கப்படுகிறது.
கடந்த பல வருடங்களாக இந்த வானை பயன்படுத்தியே பெரும்பாலானோர் கடத்தப்பட்டுள்ளனர். இந்த ஆட்கடத்தல்கள் பாதுகாப்பு; அமைச்சின் நேரடி உத்தரவின் பேரில் சாதாரண உடையில் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக தகவல்களை வெளியிட்ட ஒருவர் கூறியுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈழம்-e-செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக