செவ்வாய், 12 அக்டோபர், 2010

நன்றி மறு ஆய்வு

தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

இலங்கையின் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையை, உலகில் வேறெந்த நாட்டின் பிரச்சினையுடனும் ஒப்பிடுவதற்கு பலர் விரும்புவதில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை உலகில் வேறெங்கும் காண முடியாத தனித்துவமான பிரச்சினை என்றே, குறிப்பாக தமிழ் தேசிய குழுமத்தை சேர்ந்தவர்கள் நம்புகின்றனர். அவ்வாறு கூறுகின்றவர்கள் கூட, தமிழரை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை நிராகரிப்பதில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு ஒரு காலத்தில் கருத்தளவில் மட்டுமே இருந்து வந்துள்ளது. இன்று அது நிறுவனமயப்படுத்தப் பட்டு வருகின்றது.
இஸ்ரேலிய அரசு புரியும் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, பாலஸ்தீனர்களின் இனச்சுத்திகரிப்பையும், இனப்படுகொலையையும் கூட நியாயம் என்று வாதாடும் அளவிற்கு கண்மூடித்தனமான விசுவாசிகள் பெருகி வருகின்றனர். இஸ்ரேலுக்கு சார்பான தமிழ் சியோனிச கொள்கையை வளர்த்தெடுக்கும் நோக்கோடு சில தொடர் கட்டுரைகள் இணையத் தளங்களில் வலம் வருகின்றன. புலம் பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் அதற்கு களம் அமைத்துக் கொடுக்கின்றன. தமிழர்களும், யூதர்களும் ஒரே தலைவிதியை பங்குபோடும் இனங்கள்,” என்ற தத்துவார்த்த அடிப்படையில் இருந்தே அந்த சிந்தனைகள் யாவும் முகிழ்க்கின்றன. தமிழர் மத்தியில் சியோனிசத்திற்கு ஆதரவுத் தளம் உருவாக்க பாடுபடும் புத்திஜீவிகள், தவறான உதாரணங்கள் மூலம், அல்லது வரலாற்றை திரிப்பதன் மூலம் அத்தகைய முடிவை எட்டுகின்றனர்.
இலங்கை, இந்திய அரசியல் தலைமைகள், நீண்ட காலமாக இஸ்ரேலை நிராகரிக்கும் கொள்கையை பின்பற்றி வந்தன. இந்தியாவில் இந்து அடிப்படைவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டன. பி.ஜே.பி. அரசு அணு குண்டு வெடிப்பு பரிசோதனை நிகழ்த்தியதன் பின்னணியில் இஸ்ரேலின் ஒத்துழைப்பு இருந்தமை ஒன்றும் இரகசியமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியமானது மேற்கு-தெற்கு ஆசிய நாடுகளை கண்காணிக்கும் பொறுப்பை இஸ்ரேலிடம் ஒப்படைத்திருந்தது. அவற்றை கண்காணிப்பது மட்டுமல்ல, தேவை ஏற்படின் தலையீடு செய்து ஏகாதிபத்திய நலன்களை நிறைவேற்றுவதும் அவர்களது நோக்கமாக இருந்தது.
இந்த குறிப்பிட்ட பூகோள பிராந்தியத்தில் அமைந்திருந்தவை பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள். அங்கெல்லாம் இஸ்ரேல் செல்வாக்கு செலுத்துவது இலகுவானதல்ல. பனிப்போர் காலகட்டத்தில் இந்தியா சோவியத் சார்பு நாடாக இருந்ததால், அங்கேயும் ஊடுருவ முடியாமல் இருந்தது. ஆனால் 1977 ம் ஆண்டு இலங்கையில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் யு.ஏன்.பி. ஆட்சிக்கு வந்தமை, இஸ்ரேலுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மேற்குலக சார்பு நவ தாராளவாத கொள்கையை பின்பற்றிய ஜே.ஆர். அரசு, முதன்முறையாக இஸ்ரேலிய நலன் பேணும் அமைப்பை உருவாக்கியது. அதிலிருந்து இலங்கை அரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நெருக்கமடைய ஆரம்பித்தன. அப்போது தான் ஆரம்பாகியிருந்த ஈழப்போரை அடக்குவதற்கு இஸ்ரேலின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள முடிந்தது.
வடக்கு கிழக்கில் ஆயுதபாணி தமிழ் இளைஞர்கள் மக்களுடன் மக்களாக கலந்திருந்ததால், அவர்களை அடையாளம் கண்டு தாக்குவது அரச படைகளுக்கு இயலாத காரியமாக இருந்தது. அதனால் கண்மூடித் தனமான விமானக் குண்டுவீச்சை நடத்துமாறும், பத்து பொது மக்கள் இறந்தால் அதில் ஒரு போராளி இருப்பான்,” என்றும் இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் கூறியிருந்தனர். இன்னொரு விதமாக கூறினால், போர்க்காலத்தில் தமிழ் இனப்படுகொலை அத்தியாவசியமானது என்று இஸ்ரேல் எடுத்துக் கூறியிருந்தது. அரச மட்டத்தில் இருந்து கசிந்த தகவல்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்கள், அன்று போராளிக் குழுக்களால் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டன. 1984 காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் அடுத்தடுத்து பல விமானக் குண்டுவீச்சுகள் இடம்பெறுவதும், அவற்றில் பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் அதிகரித்தது.
மூன்றாவது ஈழப்போர் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் பலம் பெருமளவு அதிகரித்திருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்திய போர் விமானங்களை மட்டுமே வைத்திருந்த சிறி லங்கா விமானப் படையினால் சமாளிக்க முடியவில்லை. இப்படியே போனால், போராளிகளின் கை ஓங்குவதும், அரச படைகள் தோல்வியடைவதும் நிச்சயம் என்ற சூழல் காணப்பட்டது. விமான எதிர்ப்பு பீரங்கிகளால் எட்ட முடியாத, அதே நேரம் உயரத்தில் இருந்த படியே இலக்கை தாக்கக் கூடிய நவீன விமானங்கள் தேவைப்பட்டன. அமெரிக்க தயாரிப்பான F – 16 ரக விமானங்கள் உயர் தாக்குதிறன் கொண்டவை. ஆனால் விலை மிக அதிகம். அதற்கு ஒரு மாற்று கிடைத்தது. இஸ்ரேலில் தயாரிக்கப்படும் கிபீர் விமானங்கள் F-16 செய்யும் அதே வேலையை செய்யும், ஆனால் விலை குறைவு. இதில் இன்னொரு அனுகூலம் இருந்தது. மேற்குலகம் நவீன ஆயுதங்களை விற்பதானால், மனித உரிமை மீறாத நாட்டிற்கே விற்போம் என்று நிபந்தனை எல்லாம் போடுவார்கள். காசு கொடுத்தால் இஸ்ரேலியர்கள் விமானம் தருவார்கள்.
“Since the J79 turbojet engine as well as much of the technology inside the Kfir are produced in Israel under U.S. license, all export sales of the Kfir are subject to prior approval from the U.S. State Department, a fact that has limited the sale of the Kfir to foreign nations. As of 2006, the IAI Kfir has been exported to Colombia, Ecuador, and Sri Lanka.” (http://en.wikipedia.org/wiki/IAI_Kfir )
உண்மையில் இஸ்ரேல் வழங்கிய கிபீர் விமானங்களும், ட்வோரா கடற்படைக் கலங்களும் இல்லா விட்டால், இலங்கை அரசு ஈழப் போரில் வென்றிருக்காது. அதே நேரம், இஸ்ரேலிய தயாரிப்புகள் ஈழத்தில் பெருமளவு உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தன. இன்றைக்கும் ஈழத்தில் போரில் உடல் ஊனமுற்ற, உறவினர்களை இழந்த மக்கள், கிபீர்களையும், ட்வோராக்களையும் சபித்துக் கொண்டிருக்கிறார்கள். போரின் கொடுமையை உணராத புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மட்டுமே, சியோனிசவாதிகளின் இஸ்ரேல் ஆதரவு பிரச்சாரம் எடுபடுகின்றது. இதை அவர்களது புலம்பெயர் அரசியலுக்கான தத்துவார்த்த அடிப்படையாகவே கருத வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்கள் அடிக்கடி யூத diaspora ” வையும், “தமிழ் diaspora” வையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அது சரியானதா?
புலம்பெயர்ந்த யூதர்கள் குறித்து இவர்கள் கொடுக்கும் தகவல்களைநம்பினால், நாம் பின்வரும் முடிவுகளுக்கு வருவோம்.
- சுமார் 1900 வருடங்களுக்கு முன்னர் யூதர்கள் அன்றைய இஸ்ரேலிய ராஜ்யத்தை இழந்து புலம்பெயர்ந்தார்கள்.
- 20 ம் நூற்றாண்டில் நவீன இஸ்ரேல் உருவாகும் வரை, பாலஸ்தீனத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய யூதர்கள் வாழ்ந்தார்கள்.
- ரோமர்கள், இஸ்லாமிய அரேபியர்கள் போன்ற அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யூதர்களின் ஆலயங்களை அழித்தார்கள். அவர்களை அகதிகளாக அலைய வைத்தார்கள்.
- புலம்பெயர்ந்த யூதர்கள் (கிறிஸ்தவ) ஐரோப்பாவில் மட்டுமே அடைக்கலம் புகுந்தனர்.
- ஐரோப்பாவில் யூதர்கள் வறுமையான நிலையில் காணப்பட்டனர். யூதர்கள் மீதான கலவரங்களுக்கு காரணம் இனக்குரோதம்.
- 1900 ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த காலத்தில் இருந்து இஸ்ரேலிய தேசியம் யூதர்களின் லட்சியமாக இருந்தது.
மேற்குறிப்பிட்ட தகவல்களில் எத்தனை வீதம் உண்மை கலந்திருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நமக்கு யூதர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ரோம சாம்ராஜ்ய காலகட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் கிரேக்க மொழி வரலாற்று ஆசிரியர்களால் எழுதப் பட்டவை. அதற்கு முன்னர் நடந்த சம்பவங்களை பற்றி அறிய, விவிலிய நூலையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. (தற்போது அகழ்வாராய்ச்சி மூலம் அந்த தகவல்கள் சரி பார்க்கப் படுகின்றன.) யூதர்களின் மத நூலான தோரா (கிறிஸ்தவர்களுக்கு : பழைய ஏற்பாடு) அவர்களைப் பற்றிய பூர்வீக வரலாற்றுக் கதைகளையும் கூறுகின்றது. இன்றைய ஈராக்கில் உள்ள ஊர்என்ற நகரில் இருந்து ஆபிரஹாமின் தலைமையில் யூத பழங்குடியினர் கானான் வருகின்றனர். பொதுவான மூதாதையரைக் கொண்ட பன்னிரு இனங்கள் ஆதி கால யூதர்களாக இனங்காணப் படுகின்றன. அவர்கள் நாடோடிக் குழுக்களாகவே ஆண்டவரால் நிச்சயிக்கப்பட்ட கானான் தேசத்திற்கு வந்து சேர்கின்றனர். கானான் தேசத்தில் கானானிய மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், யூத குடிகளும் அருகாமையில் வாழ்ந்துள்ளன. ஒரு கட்டத்தில் பன்னிரு யூத குடிகளும் எகிப்தில் அடிமைகளாகின்றனர். மோசெஸ் அவர்களை விடுவித்து மீண்டும் கானான் என்ற நிச்சயிக்கப்பட்ட பூமிக்கு கூட்டி வருகிறார். மொசெசின் தம்பியின் தலைமையில் ஆயுதமேந்தியயூதர்கள், கானான் மக்களை இனப்படுகொலை செய்கின்றனர்.கானானியர்களை இனச் சுத்திகரிப்பு செய்த பின்னரே,அவ்விடத்தில் யூதர்களின் ராஜ்ஜியம் உருவாகின்றது. இந்ததகவல்கள் யாவும் விவிலிய நூலில் எழுதப்பட்டுள்ளன.

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுவது எத்தனை அபத்தமானது என்பதை இப்போது பார்க்கலாம். விவிலிய நூலில் உள்ள ஆதி கால யூதர்களின் வரலாறும், தமிழர்களின் வரலாறும் எந்த இடத்தில் ஒத்துப் போகின்றது? தமிழகத்திலும், ஈழத்திலும் வாழும் தமிழர்கள் எங்கோ வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இனம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. (தமிழ் தேசியவாதிகள் கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.) சங்க கால தமிழ் இலக்கியங்களிலும் அது போன்ற தகவல் எதுவும் இல்லை. மகாவம்சம் (சிங்களவர்களின் தோரா”?) வேண்டுமானால் இஸ்ரேலிய ஆதரவாளர்களுக்கு கைகொடுக்கலாம். அதில் வரும் கதைகள் பல யூதர்களின் வரலாற்றுக் கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கன. யூதர்கள் ஜாஹ்வே என்ற ஓரிறைக் கோட்பாட்டில் உறுதியாக இருந்ததைப் போல, சிங்கள பௌத்தர்கள் புத்தர் என்ற ஓரிறைக் கோட்பாட்டை நம்புகின்றனர். தமிழர்களில் பெரும்பான்மையானோர் பல தெய்வ வழிபாட்டைக் கொண்ட இந்துக்கள். தமிழர்களில் இந்துக்களுக்கு அடுத்ததாக கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். இவர்களும் சிலை வணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.
கடவுளரின் படங்களை, உருவச் சிலைகளை வைத்து வழிபடுவதை, யூத மதம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றது. இந்த விடயத்தில் மட்டும் யூதர்கள் மத்தியில் சமரசத்திற்கு இடமில்லை. யூதர்களின் வரலாறு முழுவதும் மதம் முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. யூத மதம் மட்டுமே யூதர்கள் அனைவரையும் அன்றில் இருந்து இன்று வரை ஒரே சமூகமாக பிணைக்கின்றது. தமிழர்களிடம் அவ்வாறு தனித்துவமான மதம் ஒன்றுள்ளதா? தமிழ் என்ற மொழி மட்டுமே தமிழர்களை ஒன்றிணைக்கும் புள்ளி. பண்டைய காலத்தில் இருந்தே யூதர்கள் ஹீபுரு மட்டுமல்லாது, பல்வேறு மொழிகளை பேசுவோராக இருந்துள்ளனர். ஆபிரஹாம் குடும்பத்தினர் பாபிலோனிய மொழி பேசினார்கள். இயேசு கிறிஸ்துவின் குடும்பத்தினர் அரேமிய மொழி பேசும் யூதர்கள். பிற்காலத்தில் கிரேக்க மொழி பேசும் யூதர்களே பெருவாரியாக கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். ஆகவே யூதர்கள் என்பது, ஒரு மதத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் சொல் என்பதை விளக்க வேறு உதாரணம் தேவையில்லை.
யூத மதத்தின் அச்சாணியாக ஓரிறைக் கோட்பாடு உள்ளது. தோரா முழுவதும் யூதர்கள் எவ்வாறு அதில் உறுதியாக இருந்துள்ளனர் என எழுதப் பட்டுள்ளது. எகிப்தில் இருந்து மோசெஸ் அழைத்து வந்த யூதர்கள், புனிதப் பசு உருவிலான தெய்வங்களை (இன்றும் இந்துக்களின் வழிபாட்டுக்குரியது) வணங்கினார்கள். ஆண்டவரிடம் பத்துக் கட்டளைகளை பெற்றுக் கொண்டு வந்த மோசெஸ், அந்த சீரழிவுக் காட்சிகளைக் கண்டு சீற்றமுற்றார். பிற தெய்வங்களை வழிபட்ட யூதர்களை சபித்தார். இறைவன் ஒருவனே என்று நம்ப வேண்டுமென்பது பத்துக் கட்டளைகளில் ஒன்று. (என்னைத் தவிர வேறொரு கடவுளை வணங்காதிருப்பீராக”) பின்னர் யூதர்கள் தமது தவறை உணர்ந்து ஓரிறைக் கோட்பாட்டின் கீழ் ஒன்று சேருகின்றனர். அதன் பிறகே, (கவனிக்கவும்) சவுல், டேவிட், சொலமன் ஆகிய மன்னர்களின் ராஜ்ஜியம் உருவாகியது. யூத மன்னர்களை, பல தெய்வங்களை வழிபடும் சைவத்தை அரச மதமாக கொண்ட தமிழ் மன்னர்களுடன் எப்படி ஒப்பிட முடியும்?
வெறும் மதம் மட்டும் யூதர்களை ஒன்று சேர்க்கவில்லை. கடுமையான மதக் கட்டுப்பாடுகளும் யூதர்களை தனி இனம் என்ற என்ணத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்தது. பன்றியிறைச்சி யூதர்களுக்கு விலக்கப்பட்ட உணவு. யூதர்கள் பன்றியிறைச்சி சாப்பிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், உயிரை விட தயாரானவர்கள். கி.மு. 175 ம் ஆண்டு ரோமர்களின் ஆட்சிகுட்பட்ட ஜெருசலேமில் யூதர்களுக்கு எதிரான அடக்குமுறை கடுமையாக இருந்தது. அப்போது பலவந்தமாக பன்றியிறைச்சி சாப்பிடுமாறு சித்திரவதை செய்யப்பட்டதால் உயிர் விட்ட ஏழு சகோதரர்கள் கதை பிரபலமானது. முஸ்லிம்கள் ஹலால் என்று சொல்லும் உணவை, யூதர்கள் ஹோஷர் என்கின்றனர். முஸ்லிம்களைப் போலவே யூதர்களும் சுன்னத்து செய்து கொள்வது அவர்களது மதக்கடமை.
தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடும் அறிவுஜீவிகள், இது போன்ற ஒற்றுமைகள் ஏதாவது உண்டா என்றும் நிரூபிக்க வேண்டும். தமிழைத் தாய்மொழியாக கொண்ட முஸ்லிம்களை வேண்டுமானால் இந்த விடயத்தில் யூதர்களுடன் ஒப்பிடலாம். ஆனால் ஈழத் தமிழ் தேசியமானது, இஸ்லாம் தவிர்ந்த இந்து, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்களையே தமிழர்களாக கருதுவதை இங்கே குறிப்பிட வேண்டும். மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோரின் பேச்சிலும், எழுத்திலும் இஸ்லாமியர் மீதான வெறுப்பு மறைந்திருக்கும். அந்த நிலைப்பாடு ஏகாதிபத்திய நலன் சார்ந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.
இலங்கையை ஆண்ட தமிழ், சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களுக்கு வணிகம் செய்யும் உரிமையை மட்டுமே வழங்கியிருந்தார்கள். அதற்கு காரணம் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் காணப்பட்ட சாதியம். அனைத்து சாதியினருக்கும் விதிக்கப்பட்ட வேலை இருந்தது. அந்தக் கட்டமைப்பில் முஸ்லிம்களுக்கு இடமில்லை. அதே போன்றே ஐரோப்பாவிலும் நடந்தது. நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தை கொண்ட கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்கள் செய்வதற்கு எந்த வேலையும் இருக்கவில்லை. நிலம் வாங்கி விவசாயம் செய்யவும் உரிமை இல்லை. அத்தகைய சூழ்நிலையில் அன்று பெரிதாக வளர்ச்சியடையாத வணிகம் மட்டுமே சாத்தியமானது. சில யூதர்கள் வாணிபம் செய்து பெருஞ் செல்வம் சேர்த்தனர். அதனால் பொறாமை கொண்ட பெரும்பான்மை கிறிஸ்தவ ஐரோப்பியர்கள், இனக்கலவரங்கள் மூலம் யூதர்களின் செல்வத்தை அபகரித்தார்கள்.
ஹிட்லருக்கு முன்னரே யூத இனப்படுகொலையை ஆரம்பித்து வைத்தவர்கள் வேறு யாருமல்ல. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவரின் சிலுவைப்படை வீரர்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம்: சிலுவைப்போருக்கு தேவையான நிதியைஅறவிடுவதற்காக, இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்தயூதர்களை கொல்வதில் தவறில்லை!” அத்தகைய நியாயப்படுத்தல்கள் தான் ஹிட்லரின் யூத இனவழிப்பின் தத்துவார்த்த அடிப்படை.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக